தங்கள் காதலை நிறைவேற்றிக் கொள்ள காதலனும், காதலியும் சேர்ந்து நட்பாக பழகிய இளம்பெண் ஒருவரை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம், நொய்டாவில் உள்ள செல்போன் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த கபில், ரூபி ஷர்மா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் காதலுக்கு ரூபி வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு இருந்துள்ளது.
இந்நிலையில் எப்படியாவது ஒன்றாக வாழ வேண்டும் என திட்டம் போட்ட இந்த காதல் ஜோடி அதற்கு அப்பாவி பெண் ஒருவரை பலியாக்கியுள்ளனர்.
கபில் பணிபுரிந்து வந்த அதே நிறுவனத்தில் பூனம் என்ற இளம்பெண் பணிபுரிந்து வந்தார். இவர், இந்த காதல் ஜோடிகளைப் பற்றி முன்னதாகவே தெரிந்தவர். இவர்கள் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு இருந்து வந்ததும் இவருக்குத் தெரியும்.
காதலர்களிடம் நட்பாகவே பழகி, தன்னுடைய ஆதரவையும் தெரிவித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பூனம் கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனை அடுத்து நடந்த விசாரணையில் கபில், ரூபி ஆகியோர் சிக்கினர். அவர்களிடம் காவல்நிலையத்தில் நடத்திய விசாரணையில், தங்களது காதலுக்கு ரூபி வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால், பூனத்தை தனியே அழைத்து சென்று அவரை கொலை செய்து எரித்து விட்டதாகவும், ரூபி தான் இறந்து விட்டார் என்று அவரது வீட்டினரை நம்ப வைப்பதற்காக, பூனத்தை எரித்த இடத்தில் ரூபியின் பொருட்களை போட்டு விட்டு சென்றதாகவும் கபில் வாக்குமூலம் அளித்தார்.
ரூபி இறந்துவிட்டார் என்று அவரது குடும்பத்தினருக்கு தெரிந்தால் நாங்கள் இருவரும் வேறு எங்காவது சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என இருந்ததாகவும் இருவரும் தெரிவித்துள்ளனர்.
தங்கள் காதலை நிறைவேற்றுக் கொள்வதற்காக, அன்பும் நட்பும் இவர்கள் காதலுக்கு ஆதரவாகவும் இருந்த தோழியை, அறியாத அப்பாவி பெண்ணை, சுயநலக் காதலர்கள் கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.