உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில், திருமணம் செய்ய மறுத்ததால், தன்னுடன் படிக்கும் மாணவரின் முகத்தை மாணவி ஒருவர் பிளேடால் கீறி சிதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலிக்க மறுக்கும் பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசும் கொடூர இளைஞர்களின் மோசமான வழியைப் பின்பற்றி, உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண், காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞரின் முகத்தை பிளேடால் கிழித்து சிதைத்தச் சம்பவம் நடந்தேறியுள்ளது.
பரேலியைச் சேர்ந்த இன்டர்மீடியட் கல்லூரியில் ஒன்றாகப் படித்து வந்த இளைஞருடன், அப்பெண் நட்பாகப் பழகி வந்த நிலையில், நட்பு காதலாக மாறியது. திடீரென, காதலில் விரிசல் ஏற்பட்டு, அப்பெண்ணை இளைஞர் புறக்கணித்து வந்துள்ளார்.
ஆனால், இளைஞரை விடாமல், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பெண் வலியுறுத்தியுள்ளார். இதனை ஏற்காத இளைஞரோ தான் மேற்கொண்டு படித்து, நல்ல வேலையைத் தேடிக் கொள்ள விரும்புவதாகக் கூறியுள்ளார்.
காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால் மிகுந்த ஆத்திரம் அடைந்த பெண், வியாழக்கிழமை காலை, இளைஞர் கல்லூரிக்கு வந்துகொண்டிருந்த போது, தனது கையில் வைத்திருந்த பிளேடால், முகத்தை பல முறை கிழித்துத் தள்ளியுள்ளார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், “நீ மிகவும் அழகாக இருக்கிறாய் என்ற கர்வம் உனக்கு. இனி ஒருவரும் உன்னைத் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள்” என்று அப்பெண் கத்தியுள்ளார். மேலும், தான் போட்ட கீறால்களால், இளைஞரின் முகத்தில் இருந்து ரத்தம் கொட்டியதைப் பார்த்த அப்பெண் மயக்கம்போட்டு கீழே விழுந்துள்ளார்.
இதில் மிகத் துயரமான விஷயம் என்னவென்றால், ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இளைஞரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், பிளேடால் கீறியதில், அவரது முகத்தில் இருந்த சில முக்கிய நரம்புகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்ட போது, இது கல்லூரிக்கு வெளியே நடந்துள்ளது. இது பற்றி எங்களால் எந்தக் கருத்தும் கூற முடியாது என்று தெரிவித்துவிட்டனர்.
இதுவரை இந்த சம்பவம் குறித்து யாரும் புகார் அளிக்கவில்லை. மேலும், இருவருமே சிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.