உலகம் முழுவதும் காதலர் தினத்தன்று, காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தும் விதமாக ரோஜா மலரை அன்பு பரிசாக கொடுத்து வருகின்றனர். இதனால் வழக்கத்தினை விட பிப்ரவரி மாதத்தில் ரோஜா ஏற்றுமதி அதிகரிக்கும்.
இந்த நிலையில் வரவிருக்கும் பிப்ரவரி 14-ம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது.
காதலர் தினத்தில் காதலர்களுக்கு தேவையான ரோஜா மலர்களை ஓசூரில் நிலவும் குளிர்ச்சியான சீதோஷண தட்ப வெப்பத்தை பயன்படுத்தி பல ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.
குறிப்பாக ஓசூரின் பேரிகை, கெலமங்கலம், பாகலூர், தளி, தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் மலர் சாகுபடியை விவசாயிகள் செய்து வருகின்றனர். இதற்காக மத்திய அரசு வழங்கும் 100% சொட்டு நீர்ப் பாசனம் மற்றும் மானியத்துடன் கூடிய பசுமைக்குடில் அமைத்து சிறு விவசாயிகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை ஓசூரில் ரோஜா மலர் சாகுபடி செய்து வருகின்றனர்.
ஒசூரிலிருந்து ஆண்டு முழுவதும் ரோஜா மலர்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வந்தாலும், பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில் கோடிக் கணக்கான ரூபாய்க்கு ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்வது வழக்கம். ஓசூரில் பல வகையான காய்கறிகளுடன் ரோஜா, சாமந்தி, கார்னேஷன், ஜெர்பரா உள்ளிட்ட அலங்கார மலர்களின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
ஒசூரிலிருந்து பல வகையான ஏற்றுமதி மலர்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக காதலர் தினம், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது அதிகளவில் இந்த மலர்கள் ஏற்றுமதி ஆகி வருகின்றது. அதிலும் வரும் 14ம் தேதி காதலர் தினம் வருவதால், உற்பத்தியாளர்களும் ஏற்றுமதியாளார்களும் ஓசூர் ரோஜாக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இது குறித்து ஏற்றுமதியாளர்கள் மத்தியில், தமிழகத்தில் பல்வேறு விழாக்களில் பயன்படுத்தப்படக்கூடிய ரோஜா மலர்களில் முக்கால் வாசி அளவிற்கு ஓசூர் பகுதியில் இருந்து தான் அனுப்பி வைக்கப்படுகிறது. இப்பகுதியில் ரோஜா உற்பத்திக்காக பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பசுமை குடில் அமைக்கப்பட்டுள்ளது.
இது தவிர இந்தியாவில் பெங்களூரு, புனே, நாசிக் உள்ளிட்ட பகுதிகளிலும் ரோஜா உற்பத்தி செய்யப்படுகிறது. ஓசூர் பகுதியில் தாஜ்மஹால், கிராண்ட்காலா, வெள்ளை, மஞ்சள், சிகப்பு, பிங்க் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வகையான ரோஜாக்கள் உற்பத்தியாகிறது. காதலர் தினம் நெருங்குவதால் உள்நாட்டு சந்தை மற்றும் சர்வதேச சந்தையில் ஓசூர் ரோஜாக்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
இதனால் ஏற்றுமதியாளர்கள் அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஏற்றுமதி ரக ரோஜா ஒன்று உள்ளூர் சந்தைகளில் ரூ.10 முதல் ரூ.12 வரையிலும், இதே சர்வதேச சந்தையில் ரூ.12 முதல் ரூ.15 வரையிலும் விற்பனை செய்யக்கூடிய வாய்ப்புள்ளது. இதனால் ஏற்றுமதியாளர்கள் அண்டை நாடுகளுக்கு இந்த சமயத்தில் விலை அதிகம் கிடைக்கும் என்பதால் ஏற்றுமதி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அங்கிருந்து ரோஜா மலர்களை கொள்முதல் செய்ய மத்திய கிழக்கு ஆசிய நாடுகளும், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும் தயக்கம் காட்டி வருகின்றன. இதனால் இந்த ஆண்டு ஒசூர் ரோஜாவுக்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், இந்தியாவிலிருந்து அந்த நாடுகள் அதிகளவில் மலர்களை இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளது.
சீனாவின் கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் வளைகுடா நாடுகள், பிலிப்பைன்ஸ், மலேசியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு ஓசூரில் இருந்து ரோஜா ஏற்றுமதி அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது வரவிருக்கும் காதலர் தினத்தையொட்டி மலர் ஏற்றுமதி இரட்டிப்பாகும் வாய்ப்புள்ளது என்றும் சந்தை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் உலகம் முழுவதிலும் உள்ள காதலர்களுக்கு பிடித்த சிவப்பு ரோஜா மலர்கள், ஓசூரில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் தாஜ்மஹால், டட்ரா, மெட்ரா, ரோப்லஸ் உள்ளிட்ட 30 வகையான ரோஜா மலர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.