விஜயவாடா:
ஆந்திராவில் ஓடும் ரயிலில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, ஆத்திரத்தில் மனைவியைக் கீழே தள்ளிக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் தனது மனைவி கல்பனா குமாரி ( 23)யுடன் சென்னையில் இருந்து தில்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார்.
ரயில் ஆந்திராவில் உள்ள பிரகாசம் மாவட்டம் கடவகுடுரு கிராமம் வழியாக வேகமாகச் சென்று கொண்டு இருந்தபோது கணவன் மனைவிக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் குமார், ஓடும் ரயிலில் இருந்து கல்பனா குமாரியைக் கீழே தள்ளி விட்டார். இதில் ரயிலின் அடியில் சிக்கிய கல்பனா குமாரி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் போலீசாருக்குக் கொடுத்த தகவலின் பேரில், ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ் குமாரை கைது செய்தனர்.