பண்பாடு மற்றும் கலாச்சார பயிற்சி முனைவு அறக்கட்டளை (IMCTF) Initiative for Moral and Cultural Training Foundation நேற்று மார்ச் 2ம் தேதி ஹைதராபாத் நாம்பள்ளி பொருட்காட்சி மைதானம் காந்தி நூற்றாண்டு அரங்கில் ‘கல்வியில் மாற்றங்கள்’ என்ற தலைப்பில் சிறப்பான நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில், துக்ளக் பத்திரிகை ஆசிரியர் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி வருகை தந்து சிறப்புரையாற்றினார்.
ஐஎம்சிடிஎஃப் என்னும் அமைப்பு ஆறு அடிப்படை நோக்கங்களை முன்னிறுத்தி நகர்கிறது. வனம் மற்றும் வன விலங்கு பாதுகாப்பு, ஜீவராசிகளைப் பேணுதல், சுற்றுச்சூழல் பராமரிப்பு, பெற்றோர், ஆசிரியர் மற்றும் பெரியோர்களை வணங்குதல், பெண்மையைப் போற்றுதல், நாட்டுப் பற்றை உணர்த்துதல் என்னும் உயர்ந்த கலாச்சாரத்தை பள்ளி மாணவர்களிடையே நினைவுபடுத்துவது இதன் முக்கிய நோக்கம்.
நேற்று மாலை 6 மணி அளவில் திரு குருமூர்த்தி அவர்கள் இது குறித்து விளக்கமாக ஒரு மணி நேரம் மிகச் சிறப்பாக உரையாற்றினார்.
சென்னை நகரம் மற்றும் சுற்றுப்புறங்களில் தற்போது 300 பள்ளிகளுக்கு மேல் ஐஎம்சிடிஎஃப் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு இந்திய கலாச்சார இலக்கியங்கள் பற்றிய போட்டிகள் நடைபெற்றன.
ஒரு லட்சம் மாணவர்களுக்கு மேல் பங்கு கொண்டு நம் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் ஆர்வம் ஏற்று ஆச்சாரிய வந்தனம், கோ வந்தனம், கன்யா வந்தனம், மாதாபிதா வந்தனம், வீரர்கள் வந்தனம், வன வந்தனம் போன்ற நிகழ்ச்சிகளில் உற்சாகத்தோடு பங்கு கொண்டனர் என்று தெரிவித்தார். அதன் பிறகு கேள்வி பதில் நிகழ்ச்சி இருந்தது. காந்தி நூற்றாண்டு அரங்கம் நிரம்பி வழிந்தது.
ஐஎம்சிடிஎஃப் தெலங்காணா கிளை 2019ல் இது குறித்து ஆசிரியர் பயிற்சி முகாம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக ஐஎம்சிடிஎஃப் தெலங்காணா கிளை ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியை முதல்முதலாக ஹைதராபாத்தில் நடத்தும் முயற்சியில் இருப்பது வரவேற்கத்தக்கது.
- ராஜி ரகுநாதன், ஹைதராபாத் – 62