பெண்கள் ‘டுவென்டி-20’ உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி, இன்று இங்கிலாந்தை சந்திக்கிறது. இதில் வென்று இந்தியா முதன் முறையாக இறுதி போட்ட்டிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான ‘டுவென்டி-20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் மார்ச் 5ம் தேதி அரையிறுதி போட்டிகள் நடக்கின்றன. முதல் அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
2009, 2010, 2018க்குப் பின் நான்காவது முறையாக அரையிறுதியில் பங்கேற்கும் இந்தியா இன்று வெற்றி பெற்று முதன் முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணிக்கு பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா, ‘நம்பர்-1’ வீராங்கனை ஷபாலி வர்மா ஜோடி துவக்கம் தருகிறது. இதில் ஷபாலி மட்டும் தான் நம்பிக்கை தருகிறார். மந்தனா விளையாடிய 3 போட்டியில் 10, 11, 17 என சொதப்புகிறார்.
‘மிடில் ஆர்டரில்’ ஜெமிமா ஆறுதல் தர, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (2, 8, 1, 15) ஒட்டுமொத்தமாக அணியை கைவிடுகிறார். தீப்தி சர்மா, வேதா பின் வரிசையில் சற்று உதவுகின்றனர்.
பவுலிங்கை பொறுத்தவரையில் இந்தியாவின் பூனம் (9 விக்.,), ராதா (2ல் 5 விக்.,) இருவரும் இரட்டை ‘சுழல்’ துப்பாக்கிகளாக செயல்படுகின்றனர். ராஜேஸ்வரியும் கைகொடுப்பது பலம். தவிர ஷிகா பாண்டேவும் சாதிப்பார் என நம்பலாம்.
இங்கிலாந்தை பொறுத்தவரையில் ‘டுவென்டி-20’ உலக கோப்பை வரலாற்றில் இந்திய அணியிடம் இதுவரை தோற்றதே இல்லை. 2009, 2012, 2014, 2016 ல் லீக் சுற்றுக்கள், 2018ல் அரையிறுதியில் இந்தியாவை வென்றது.
இதனால் நம்பிக்கையுடன் களமிறங்கும். கேப்டன் ஹெதர் நைட் (193), ஷிவர் (202) பேட்டிங்கில் முதுகெலும்பாக உள்ளனர். பவுலிங்கில் ஷ்ரப்சோல் (8 விக்.,), எக்ளஸ்டோன் (8), கிளன் (6) கூட்டணி தொல்லை தரலாம்.
சமீபத்திய முத்தரப்பு தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தியது போல இந்தியா மீண்டும் வென்று, முதன் முறையாக இறுதிப் போட்டிக்கு செல்லும் என நம்பப்படுகிறது. மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா மோதுகின்றன.
சிட்னியில் இன்று மழை வர 100 சதவீதம் வாய்ப்புள்ளது. இதனால் போட்டி துவங்குவதே சந்தேகம் தான். இதனால் ஐ.சி.சி., அரையிறுதிக்கு ‘ரிசர்வ் டே’ தர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதை ஏற்க ஐ.சி.சி., மறுத்துவிட்டது.
இதனால் மழை விதிப்படி இரண்டு அரையிறுதியும் ரத்தானால், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா (‘ஏ’ பிரிவு), தென் ஆப்ரிக்கா (‘பி’) அணிகள் பைனலுக்கு (மார்ச் 7, மெல்போர்ன்) செல்லும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வெளியேறும்.