புதுதில்லி:
சசிகலாவுக்கு பொதுச்செயலராக செயல்பட உரிமை இல்லை; கட்சியை நடத்தும் உரிமை எனக்கே உள்ளது என்று தில்லியில் ஓ.பி.எஸ் பேட்டி அளித்தார்.
முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் அணியினர் தாக்கல் செய்தனர். இதற்காக, புதுதில்லி வந்துள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி உடன் இருந்தார். அப்போது பேசிய ஓபிஎஸ்,
திகார் சிறையில் இருக்கும் அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
மறைந்த மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவேவிற்கு அதிமுக சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதிமுக சட்டவிதியின்படி, தேர்தல் நடத்தித்தான் பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பொதுச் செயலாளர் இல்லாத போது பொருளாளர்தான் பொறுப்பேற்று கட்சியை நடத்த வேண்டும். எனவே, சசிகலாவிற்கு பொதுச்செயலாளராக செயல்பட உரிமை இல்லை. பொருளாளரான எனக்கே அந்த உரிமை உள்ளது.
இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் டிடிவி தினகரன் தீர விசாரிக்கப்பட வேண்டும். ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும். இது தொடர்பாக தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
திண்டுக்கல் சீனிவாசன் அதிக அளவில் பணத்தை வங்கியில் இருந்து எடுத்து வருவதை தடுக்கவும் தேர்தல் கமிஷனிடம் கோரியுள்ளோம். ஏற்கேனவே வங்கி கணக்கை முடக்க கடிதம் அளித்தும் வங்கிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
குடியரசுத் தேர்தல் எப்போது நடைபெறும் என்று இன்னும் அறிவிக்கப்பட வில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் யாருக்கு ஆதரவு என்பது பற்றி முடிவு செய்வோம் என்று கூறினார்.