மகளிர் தினத்தை முன்னிட்டு மும்பையில் தேநீர் கடைக்காரர் ஒருவர் தனது கடைக்கு வரும் பெண்களுக்கு இலவசமாக தேநீர் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் மும்பையில் தேநீர் கடை நடத்தி வரும் மனோஜ் தாகூர் என்பவர் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பான பேனரையும் தனது கடைக்கு அருகில் அவர் வைத்துள்ளார். அதில், மகளிர் தின நல்வாழ்த்துக்கள். இதை முன்னிட்டு இன்று மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை பெண்களுக்கு இலவச தேநீர் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மனோஜ் தாகூர் கூறுகையில், நான் 10-15 ஆண்டுகளாக தேநீர் விற்பனை செய்து வருகிறேன்.
எனவே இந்த மகளிர் தினத்தில் நான் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் ஏதாவது செய்ய வேண்டும் என்று உணர்ந்தேன். பெண்கள் வாடிக்கையாளர்கள் இங்கு அடிக்கடி வருகிறார்கள். நமது பிரதமரும் தேநீர் விற்றவர். எனவே நான் அவரால் ஈர்க்கப்பட்டேன். எந்த வேலையும் சிறியதாகவோ பெரியதாகவோ இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.