கொரோனா அச்சத்தால் ஐ.பி.எல் போட்டிகள் ஏப்ரல் -15-ம் தேதி வரை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் முதலில் மார்ச் 29 ஆம் தேதி துவங்க திட்டமிடப்பட்டது. இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் மோத திட்டமிடப் பட்டிருந்தது. ஆனால் கோவிட் -19 பெருமளவில் பரவுவதைத் தடுக்க அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, ஐபிஎல் நிர்வாகம் எடுத்த முடிவுகளின் அடிப்படையில், பி.சி.சி.ஐ.யின் தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் இதுகுறித்து முடிவெடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கெனவே கொரோனா பரவலாக்கத்தைத் தடுக்கும் நடவடிக்கையாக, ரசிகர்கள் பெருமளவு கூடுவதைத் தடுக்க ரசிகர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்தலாம் என்று யோசிக்கப் பட்டது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி ஐபிஎல் தொடங்கியதும், போட்டிகளை மூடிய அரங்கத்தில் நடத்தலாம் என்று கூறப்படுகிறது
வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதும், ரசிகர் கூட்டங்களின் கட்டுப்படுத்துவதும் இருக்கும் வரை விளையாட்டு நிகழ்ச்சிகள் முற்றிலுமாக ரத்து செய்யப்படாது என்று மத்திய இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கிரென் ரிஜிஜு கூறியிருந்தார்! இருப்பினும் வெளியுறவு அமைச்சகம் பி.சி.சி.ஐ.யிடம் திட்டமிடப்பட்ட தேதியில் போட்டியைத் தொடங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியது.
இந்நிலையில், ஏப் 15ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப் படும் என்று வெளியான செய்திக்கு இடையில், ஐபிஎல் முன்னாள் தலைவர் ராஜீவ் சுக்லா டிவி சேனல் ஒன்றில் பேட்டி அளித்த போது, ஐபிஎல் போட்டிகள் திட்டமிடப்பட்ட அட்டவணைப்படி தொடரும் என்று கூறினார்.
இந்தியா ஏற்கெனவே சர்வதேச விசாக்களை ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளது! எனவே, ஐபிஎல் போட்டிகளுக்கும் திட்டமிடப்பட்ட தேதியில் வெளிநாட்டு வீரர்கள் வர மாட்டார்கள். இந்நிலையில், திட்டமிடப்பட்ட மார்ச் 29ம் தேதிக்கு முன்னர் வெளிநாட்டு வீரர்கள் வருவதற்கு சாத்தியமில்லை. .அதே நேரம், வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கும் நிர்வாகம் விரும்பவில்லை.
எனவே ஒரு தற்காலிக ஒத்திவைப்பாக ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைக்கப் பட்டிருக்கின்றன. வெளியுறவு அமைச்சகத்தால் விசாக்களை நிறுத்தி வைப்பது தொடர்பான எந்தவொரு நீட்டிப்பும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மேலும் ஒத்திவைக்கப்படுவதையோ அல்லது போட்டிகள் முற்றிலும் ரத்து செய்யப் படுவதையோ தான் குறிக்கும். எனவே ஐபிஎல் போட்டிகளின் இந்த வருட தலைஎழுத்து வெளியுறவு அமைச்சகத்தின் கையில் இருக்கிறது.