உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தொடக்கம் சீனாவின் வூஹான் நகர் என்பது சைனாவே ஒப்புக் கொண்ட விஷயம். ஆனாலும், இந்த வைரஸின் தொடக்கத்துக்காக, அமெரிக்காவைக் குற்றம் சாட்டியது சீனா. பதிலுக்கு சீனாவின் செயல்களால் உலகம் இன்று சிரமப்படுகிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.
இரு தரப்பும் மாறி மாறி குற்றம் சுமத்திக் கொண்டாலும், உலக மக்களின் ஒட்டுமொத்தமான கருத்து, சீனர்களின் மாறிவிட்ட வாழ்வியல் முறையும், அந்நாட்டின் பாரம்பரியத்தை மறந்து, நவீன வாழ்க்கை முறை என்று, பறப்பன, ஊர்வன, நடப்பன என்று எந்த வித பாகுபாடும் இன்றி, அனைத்தையும் உணவாக்கி மனிதர்கள் தின்பது தான் என்கின்றனர். உண்பதை மறந்து, தின்பதை நினைத்துக் கொண்டதால்தான் சீனர்களால் இந்த பாதிப்பு உலகுக்கு ஏற்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டுக் காட்டுகின்றனர் பலர்.
சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ துவங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் இந்த வைரசுக்கு 7,982 பேர் உயிரிழந்துள்ளனர். 1,98,400 பேர் பாதிக்கப்பட்டனர். அதில், 82 ,763 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சீனாவில் 3,237 பேர் உயிரிழந்துள்ளனர். 69,614 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு அடுத்த இடத்தில் இத்தாலி உள்ளது. அங்கு 2,503 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 345 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 3,526 பேருக்கு பாதிப்பு என, 26,062 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரானிலும் பலி எண்ணிக்கை 988 ஆக உள்ளது. ஸ்பெயினில் 533 பேரும், ஜெர்மனியில் 26 பேரும், தென் கொரியாவில் 84 பேரும், பிரான்சில் 175 பேரும், அமெரிக்காவில் 112 பேரும், சுவிட்சர்லாந்தில் 27 பேரும், பிரிட்டனில் 43 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவிலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 143 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. 14 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் பெருமளவு மேற்கொள்ளப்படுவதால், இந்த வைரஸ் பரவலாக்கம் பெரிதும் கட்டுப் படுத்தப் பட்டிருக்கிறது. இந்நிலையில், ‘கொரோனா’ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளியின் உடல் நிலை மற்றும் வயதைப் பொறுத்து எச்.ஐ.வி.,க்கு வழங்கப்படும் ‘லோபினாவிர்’ மற்றும் ‘ரிடோனாவிர்’ உள்ளிட்ட மருந்துகளை வழங்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், நீரிழிவு, சீறுநீரக கோளாறு, நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு, இந்த மருந்துகளை வழங்க நேற்று முதல் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே நேரம், கொரோனாவுக்கு கண்டுபிடித்த மருந்தை மனிதர்களிடம் பரிசோதனை செய்ய சீனா உத்தரவு பிறப்பித்துள்ளது. தடுப்பு மருந்து பரிசோதனையை அமெரிக்கா துவக்கிய நிலையில், மனிதர்களுக்கு சோதனை செய்து பார்க்க ஆராய்ச்சியாளர்களுக்கு சீன அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தேவை அதிகமுள்ளதால், மருந்து பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் விநியோகத்திற்கு முக்கியத்துவம் அளிக்க உள்ளதாக, ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் தெரிவித்துள்ளது.