கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த பாலிவுட் பாடகி கனிகா கபூர் கொரோனா வைரஸ் டெஸ்ட் நெகட்டிவானதால் வீடு திரும்பியுள்ளார்.
பிரபல பாலிவுட் பாடகியான கனிகா கபூர், லண்டனில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதனை தொடர்ந்து கடந்த மார்ச் 9ஆம் தேதி இந்தியா வந்த அவர், விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இருந்து எஸ்கேப்பானார்.
தொடர்ந்து மும்பையில் உள்ள தனது வீட்டில் இருந்த கனிகா கபூர் கடந்த 11 ஆம் தேதி விமானம் மூலம் சொந்த ஊரான லக்னோவுக்கு சென்றுள்ளார். மார்ச் 15ஆம் தேதி லக்னோவில் நடைபெற்ற பார்ட்டியில் பங்கேற்றார் கனிகா கபூர்.
இந்த பார்ட்டியில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலர் பங்கேற்றனர். இந்நிலையில் 16ஆம் தேதி கனிகாவுக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பது உறுதியானது. இதனால் அந்த பார்ட்டியில் பங்கேற்ற பலருக்கும் கொரோனா தொற்று இருக்கலாம் என அஞ்சப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
பாஜக மூத்த தலைவரான வசுந்தரா ராஜே, அவரது மகனும் எம்.பி.யுமான துஷ்யந்த், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரைன், பாஜக எம்பி அனுபிரியா பட்டேல் ஆகியோர் கனிகா கபூருடன் நெருக்கமாக இருந்ததால் அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்பட்டது.
அதில் லோக்சபா எம்.பியான துஷ்யந்த் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்ததால் குடியரசுத் தலைவருக்கும் கொரோனா தொற்று ஏற்படலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரவோடு இரவாக குடியரசுத் தலைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்தது.
வைரஸ் குறித்த தனது அலட்சியம், அவரது பயண விவரங்களை மறைத்து, மக்களை சந்தித்தது, கொரோனா வைரஸுடன் பாட்டியில் பங்கேற்றது உள்ளிட்ட காரணங்களுக்காக பெரும் விமர்சனத்துக்குள்ளானார் கனிகா கபூர். நாடு முழுவதையும் பெரும் பீதிக்குள்ளாக்கிய கனிகா கபூருக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை தொடர்ந்து கனிகா கபூர் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. அதற்குள் மருத்துவமனையில் தனக்கு ஒரு ஆரஞ்சும் ஈக்கள் மொய்த்த இரண்டு வாழைப்பழங்களையும் கொடுத்தது என்றும் போதுமான வசதிகள் இல்லை என்று கூறியும் மருத்துவமனை நிர்வாகத்துடன் மல்லுக்கட்டினார் கனிகா கபூர்.
இருப்பினும் கனிகா கபூருக்கு மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து சிகிச்சையளித்து வந்தது. ஒரு பக்கம் அவருக்கு தொடர்ந்து கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டது. முதல் 4 பரிசோதனைகளில் கனிகா கபூருக்கு கொரோனா தொற்று பாஸிட்டிவாக இருந்தது. இதனால், தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
அண்மையில் அவருக்கு நடத்தப்பட்ட ஐந்தாவது பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தது. இதனை தொடர்ந்தும் மறு பரிசோதனைக்காக தொடர்ந்து சிகிச்சையிலேயே வைக்கப்பட்டார் கனிகா கபூர். இந்நிலையில் நேற்று அவருக்கு நடத்தப்பட்ட ஆறாவது பரிசோதனையில், கொரோனா டெஸ்ட் நெகட்டிவானது.
இதனை தொடர்ந்து கனிகா கபூர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். கடந்த 16 ஆம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கனிகா கபூர் வீடு திரும்பியுள்ளார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் பாலிவுட் செலிபிரிட்டி கனிகா கபூர் ஆவார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த போதும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது, அதிகாரிகள் கூறியும் வீட்டில் தனிமை படுத்திக்கொள்ளாமல் அலட்சியமாக இருந்தது உள்ளிட்ட காரணங்களுக்காக கனிகா கபூர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.