ஐடி., தொழில்நுட்பம் மற்றும் பிபிஓ., கால்செண்டர் ஊழியர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே பணியாற்றும் நடைமுறை, வரும் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக செவ்வாய்க்கிழமை நேற்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவலிலிருந்து பாதுகாப்பதற்கும், சமூக விலகலை உறுதி செய்யவும், அனைத்து ஐ.டி நிறுவனங்களின் ஊழியர்களும், ஏப்.,30ஆம் தேதி வரை வீட்டிலிருந்து பணியாற்ற மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் இந்த நடைமுறையை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக, மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
அனைத்து மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுடன், வீடியோ கான்பர்ன்சிங் மூலம் ரவிசங்கர் பிரசாத் நேற்று ஆலோசனை நடத்தினார். பின் செய்தியாளர்களிடம் அவர் இது குறித்து கூறியபோது…
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக அனைத்து நாடுகளிலும் வேலை செய்யும் பாணி மாறிவிட்டது. உலகெங்கிலும் 80 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்து வருகின்றனர். நம் நாட்டிலும், ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற இம்மாதம் இறுதி வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அது தற்போது நீட்டிக்கப்படுகிறது. வீட்டிலிருந்து பணி செய்யும் ஐ.டி., மற்றும் பி.பி.ஓ., ஊழியர்கள் ஜூலை 31 ஆம் தேதி வரை வீட்டிலிருந்தே பணியாற்றலாம்.
ஆன்லைன் சுகாதார சேவைகளை தென் மாநிலங்கள் சிறப்பாக கையாளுகின்றன. மற்ற மாநிலங்களும் இதனை பின்பற்ற வேண்டும்.
ஊரடங்கு நடைமுறைக்குப் பின் பணி நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்க, பாரத் நெட் பிராட்பேண்ட் சேவையை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் தீர்வுகளை உருவாக்க குழு அமைக்கப்படும்… என்றார்
ஐ.டி தொழிற்துறை குழுவான நாஸ்காம் ஒரு முக்கிய கோரிக்கை வைத்து இருந்தது! இதுபோல் ஒரு மாத நீட்டிப்புக்கு பதிலாக கொள்கை ஸ்திரத்தன்மை தேவை என்று வாதிட்டது.. கோவிட் -19 வைரஸ் வெடித்ததை அடுத்து நிறுவனங்கள் சீனாவின் வணிக நடவடிக்கைகளைப் பார்க்கும் நிலையில், மாநில ஐடி அமைச்சர்களுடனான ஒரு வீடியோ கான்பரன்ஸிங் சந்திப்பை மேற்கொண்டார் ரவிசங்கர் பிரசாத். அப்போது, ஒரு பெரிய மின்னணு உற்பத்தி வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
இந்தியாவுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் வருவதைத் தூண்டுவதற்கு அரசாங்கம் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்குமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நாங்கள் எந்த நாட்டிற்கும் எதிரானவர்கள் இல்லை, நாங்கள் இந்தியாவுக்கு ஆதரவானவர்கள்” என்றார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக மற்ற நாடுகளின், குறிப்பாக சீனாவின் தயாரிப்புகள் சோதிக்கப்படும் என்றார் அவர்.
சவால்கள் மற்றும் வாய்ப்புகள் உள்ள இந்த நேரத்தில் புதிய யோசனைகள் குறித்து யோசனை செய்ய மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் உயர் தொழில் நிர்வாகிகள் அடங்கிய ஓர் உயர் மட்ட ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்றார்.
ஐடி அமைச்சர்கள் கூட்டத்தில் உத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாடகாவின் துணை முதல்வர்களுடன் ஹரியானா மற்றும் சிக்கிம் முதல்வர்கள் கலந்து கொண்டனர். அனைத்து மாநிலங்களின் ஐடி செயலாளர்களைத் தவிர ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பன்னிரண்டு மாநிலங்களைச் சேர்ந்த மாநில ஐடி அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.