நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும், கொரோனா இன்னமும் ஓராண்டுக்கு இருக்கும் என்பது. கேள்விப்படும்போதே அச்சம் தொற்றிக் கொள்கிறது அல்லவா?. ஆம். நமது நாட்டியிலேயே அதிகபட்ச உயர்தர சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவமனையான தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலைேரியா இவ்வாறு நம்மை எச்சரிக்கிறார்.
“கொரோனா அதிகரித்து வரும் விதம், புள்ளி விவரங்களைப் பார்க்கும்போது ஜூன், ஜூலை மாதங்களில் இதன் பாதிப்பு புதிய உச்சத்தை எட்டும். ஆனால், அதைத் தவிர்க்க பல்வேறு மாற்று வழிகள் உள்ளன. பொது முடக்கத்தை எவ்வளவு நீட்டிக்க முடியுமோ அவ்வளவு நீட்டிப்பது நல்லது. கொரோனா பரவுவது எவ்வளவு காலம் இருக்கும் என்பதைக் கணிப்பது கடினம். ஆனால், ஒரு நோய் அதன் உச்சத்தை அடைந்தவுடன், படிப்படியாகக் கீழே வீழ்ந்துவிடும் என்று நாம் உறுதியாகச் சொல்ல முடியும். கொரோனா பரவல் ஜூன் மாதத்தில் உச்சம் பெறும். பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைப் படிப்படியாகக் குறையத் தொடங்கும்” என்கிறார் ரந்தீப் குலேரியா.
கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் உள்ள ஹூஹானில் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 6 மாதங்களாக உலக நாடுகளில் எல்லாம் பரவி, மனித சமுதாயத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. சந்திர மண்டலத்திலும், செவ்வாய் கிரகத்திலும் குடியிருக்க ஆராய்ச்சி செய்து வரும் அறிவியல் உலகம், இன்னமும் கண்ணுக்குப் புலப்படாத இந்த வைரஸை அழிக்க மருந்து கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறது.
நாடுக்கு நாடு, ஊருக்கு ஊ்ர், எல்லைக்கு எல்லை அடிக்கடி போர்களை நடத்தும் நமது விசித்திரமான போர் நடவடிக்கைகளில் கூட, அதாவது உலகப் போர்களில் கூட இவ்வளவு பேர் ஒரேநேரத்தில் அஞ்சி அஞ்சி இறந்ததில்லை என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் சுமார் 2 சதவீதம் பேர்தான் உயிரிழக்கின்றனர் என்ற புள்ளிவிவரம் நமக்கு சற்று ஆறுதல் அளித்தாலும், பயத்தில் அஞ்சி நடுங்கும் எண்ணிக்கை மட்டும் 100 சதவீதத்தை தாண்டிவிடும் என்கின்றனர் மனோதத்துவ நிபுணர்கள்.
நமது வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போட்டுவிட்டது கொரோனா. இதன் தாக்கம், தொழில்- வணிகம்-வருமானம், வேலை இழப்பு, பொருளாதாரம், அரசியல் என ஏதோ ஒருசில பாதிப்புகள் மட்டுமே என்று சொல்ல முடியாத அளவுக்கு மனித சமுதாயத்தையே சிந்திக்கவும், புதிய பரிமாணத்தில் இயங்கவும் பாடம் கற்றுக் கொடுத்துள்ளது எனலாம்.
கொரோனா ஒழிப்பில் 3-ம் கட்டம், 4-ம் கட்டம் என்றெல்லாம் திரும்பத் திரும்பச் சொல்லிவந்தாலும், சீனாவில் கூட முழுமையாக கொரோனா ஒழிந்ததாகத் தெரியவில்லை. இதுவரை உலகில் கொரோனா பக்கமே தலைவைத்துப் படுக்காத நாடுகளில் எல்லாம் தற்போது கொரோனா துளிர்விடத் தொடங்கியுள்ளது.
எத்தனையோ கட்டங்களாக ஊரடங்கு, சமூக விலகலை நடத்தினாலும், பரபரப்பாக வாழ்க்கையை நகர்த்தப் பழக்கப்படுத்திவிட்ட மனித சமூகம், இன்னமும் வீட்டில் அடங்க மறுக்கிறது. தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. வீடுகள் கல்வி நிலையங்கள் மாற்றப்பட்டுவிட்டன. விமானம், பேருந்து எனப் பொது போக்குவரத்தை துறந்துவிட்டு வாழ்க்கையை நடத்தவும் கற்றுக் கொள்ளத் தெரி்ந்துவிட்டது.
ஆனாலும், இதே நிலை நீடித்தால் உலக சமுதாயம் வறுமையின் கோரப்பிடியில் சிக்கிவிடும் என்ற அச்சத்தால் எதிர்காலத்தை நினைத்து கவலைப்படும் நிலைக்கு மனித சமூகம் வந்துவிட்டது. கொரோனா எப்போது ஒழியும்? எப்போது இயல்பு நிலைக்குத் திரும்புவது? என்று அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டுக் கொண்டாலும், இப்போதைக்கு இதற்கு வழியில்லை. கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்வதே சிறந்த வழி என்று அரசும், நம்மை வழிநடத்தும் தலைவர்களும் புத்திமதி சொல்லத் தொடங்கிவிட்டனர்.
உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு மருந்துகள், தடுப்பூசிகள் கண்டுபிடிக்காத நிலையில், கொரோனா நோய்த் தொற்று வராமல் தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஒவ்வொரு இந்தியனும் வாழ்வின் அங்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்கிறது மத்திய சுகாதார அமைச்சகம்.
கொரோனாவைத் தடுக்க செய்யக் கூடியவை; செய்யக் கூடாதவை என விதிமுறைகளை நாமே உருவாக்கிக் கொண்டு இதனை சரிவர கடைப்பிடித்தால் மட்டுமே அடுத்தக் கட்டத்திற்கு நாம் நகர முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
அதேநேரத்தில் கொரோனா என்ற ஒன்று இருப்பதையே நினைத்துக் கொண்டிருக்காமல், வந்தால் அதையும் எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என்றும், எத்தனையோ நோய்த் தொற்றை கடந்துவிட்ட மனித குலம், இதிலிருந்தும் எளிதில் மீண்டும் விடும், இதுவும் கடந்துபோகும் என்றும் ஆன்மிகவாதிகள் நம்பிக்கை ஊட்டுகின்றனர்.
- சிறப்புக் கட்டுரை – சதானந்தன், சென்னை