கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்தால், ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத சூழலில், பிளாஸ்மா தெரபி நல்ல பலனை அளிப்பதாக கூறப்படுகிறது. நோய்த்தொற்றில் இருந்து மீண்டு வந்தவர்களின் ரத்த பிளாஸ்மாவை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதே பிளாஸ்மா தெரபி. கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதத்தை குறைப்பதில் இது நல்ல பலனை தருவதாக தெரிகிறது.
அதனால் தலைநகர் thiல்லியில் 2 பிளாஸ்மா வங்கிகள் திறக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கர்நாடகாவில் பிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
அம்மாநிலத்தில் 5 நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் 3 பேர் குணமடைந்துள்ளதாகவும் மருத்துவக்கல்வி அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். எனவே பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலனை தருவதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகாவில் இதுவரை 17,390 பேர் குணமடைந்துள்ளதாகவும், அதில் 4,992 பேர் பெங்களூருவில் வசிப்பதாகவும் அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.