இந்தியாவின் நட்பு நாடாக இருந்து வந்த நேபாளம் கடந்த சில மாதங்களாக தனது நிலைப்பாட்டில் இருந்து மாறியுள்ளது. குறிப்பாக அந்நாட்டு பிரதமர் கேபி சர்மா ஒலி இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
எல்லை விவகாரத்தில் இந்தியாவின் பகுதிகளான கலபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா ஆகியபகுதிகளை நேபாளம் உரிமைக்கோரி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்திய-நேபாள எல்லையை பிரிக்கும் மாநிலங்களில் ஒன்றான பீகாரில் எல்லையோர மாவட்டமாக கிருஷ்ணகஞ் அமைந்துள்ளது.
இந்த மாவட்டத்தில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு இரு நாட்டு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஜிதேந்திர குமார் (25) இந்தியா-நேபாள எல்லை கிராமமான ‘டோலா மாபி’யில் கால்நடைகளை மேய்த்து கொண்டு வசித்து வருகிறார்.
கடந்த சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் அங்கிட் குமார் சிங், மற்றும் குல்சன் குமார் சிங் இருவருடன் தன் கால்நடைகளைத் தேடி அலைந்துள்ளார். விவசாய பகுதியைத் தாண்டி மூவரும் நடந்து திரிந்திருக்கின்றனர். அப்பொழுது, இந்திய-நேபாள எல்லையில் பணியிலிருந்த நேபாள போலீஸ் மூவரையும் நோக்கிச் சுட்டதில் ஜிதேந்திர குமார் காயமடைந்தார்.
இதையடுத்து அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக கிருஷ்ணகஞ் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவத்திற்கு இருநாட்டு எல்லை விவகாரத்திற்கும் சம்பந்தம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைய காலங்களில் இந்தியா-நேபாள எல்லையிலிருந்து இது போன்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும். கடந்த மாதம், பீகார் மாநிலம் சீதாமாரி அருகே ஒரு எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதலின் போது நேபாள ஆயுத போலீஸ் படை இந்தியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது, இதில் ஒரு இந்தியர் கொல்லப்பட்டார், மேலும் இருவர் காயமடைந்தனர்.