ஆந்திராவில் இறந்து பிறந்த தனது குழந்தையை கொரோனா அச்சத்தால் கிராமத்தினர் அடக்கம் செய்ய மறுத்ததால் நீர்பாசன கால்வாயில் தூக்கி எரிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கோட்டப்பாடு கிராமத்தை சேர்ந்தவர் ஷம்ஷா வாலி. இவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தனது கர்ப்பிணி மனைவி மாதர்பீக்கு பிரசவ வலி எடுத்ததை தொடர்ந்து நந்தியால் அரசு பொது மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அவரது மனைவி மாதர்பீக்கு நேற்று பெண்குழந்தை ஒன்று இறந்த நிலையில் பிறந்துள்ளது. இதனை அடுத்து நேற்று மாலை இறந்த குழந்தையுடன் கிராமத்துக்கு திரும்பிய ஷம்ஷா வாலி தனது குழந்தையை கிராமத்தில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்ய விரும்பியுள்ளார்.
இதற்காக கிராம மக்களிடம் அனுமதி கேட்டபோது அந்த குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருந்திருக்கலாம் என்ற அச்சத்தில் குழந்தையை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் மனவேதனை அடைந்த ஷம்ஷா வாலி வேறு வழியில்லாமல், தனது குழந்தையின் உடலை கர்னூல்-குடபா கால்வாயில் வீசி சென்றார். இதனை அடுத்து கால்வாய் நீரில் மிதக்கும் குழந்தையின் சடலத்தைக் கண்ட சில உள்ளூர்வாசிகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனை அடுத்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் கிராமவாசிகள் குழந்தையை அடக்கம் செய்ய மறுத்தால் வேறு வழியில்லாமல் குழந்தையை கால்வாயில் வீசியதாக ஷம்ஷா வாலி தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து கிராம மக்களை சமாதானப்படுத்திய காவல்துறையினர் குழந்தையில் உடலை கல்லறையில் அடக்கம் செய்தனர்.