ஆந்திர மாநிலத்தின் கடப்பா மாவட்டம், ராஜம்பேட்டை அருகே உள்ள தூர்ப்பு பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமணம்மாள் (42). இவர் கடந்த சிறிது காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக இவர் அண்மையில் நெல்லூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஆனால் நெல்லூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் அதிகம் பேர் உள்ளதால் போதிய படுக்கை வசதி இல்லை. இதனால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி ரமணம்மா நெல்லூர், கலவாயி பகுதியில் உள்ள தனது உடன் பிறந்த அண்ணன்கள் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
ஆனால் தங்கைக்கு கொரோனா இருப்பதை அறிந்த அவர்கள், அவரை தங்கள் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் ரமணம்மாள் மருத்துவமனைக்கும் திரும்ப முடியாமல் சகோதர்கள் வீட்டிலும் இருக்க முடியாமல், ஊருக்கு வெளியில் ஒரு மரத்தடியில் தங்கினார்.
இதுபற்றி அறிந்த கடப்பா மாவட்ட வருவாய்த் துறையினர் நேற்று ரமணம்மாவை மீட்டு, கடப்பா மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்குத் தேவையான உதவிகளை செய்தனர்.