பெங்களூரு உள்ள சிவாஜிநகர் பகுதியில் வசித்து வருபவர் சாரா. அவரது பெற்றோர்கள் வரன் பார்த்து வந்த நிலையில், சாரா தனது புகைப்படம், மற்றும் தன்னை பற்றிய விவரங்களைத் திருமண இணையதளத்தில் பதிவு செய்து வைத்திருந்தார்.
இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு சாராவின் செல்போன் எண்ணுக்கு அமீன் இஸ்லாம் என்ற நபர் ஒருவர்தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பேசிய அந்த நபர், திருமண இணையதளத்தில் உங்கள் புகைப்படத்தைப் பார்த்ததாகவும், நீங்கள் ரொம்ப அழகாக இருப்பதாகவும் ஆசை வார்த்தையை கூறியுள்ளார்.
மேலும், உங்களைப் பிடித்து இருப்பதால் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்து உள்ளார். இதையடுத்து சாராவும், அமீனும் செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வந்து உள்ளனர். அப்போது, சாராவுக்கும் அமீனை பிடித்துபோக, சில நாட்கள் சென்ற நிலையில், தனது பெற்றோருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டி உள்ளது.
இதனால் தனக்குப் பணம் தந்து உதவும்படி சாராவிடம், அமீன் கேட்டு உள்ளார். இதனால் அமீன் கூறிய வங்கிக்கணக்கிற்குச் சாரா ரூ.10 லட்சம் வரை அனுப்பி வைத்து உள்ளார். பணம் அமீனின் கைக்கு வந்த நிலையில், கடந்த சில தினங்களாக சாராவிடம், அமீன் பேசாமல் இருந்து வந்து உள்ளார். ஆசையாகப் பேசி வந்த நபர் திடீரென பேசாமல் போனது சாராவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சாரா தினமும் அமீனை செல்போனில் தொடர்பு கொண்டு வந்த நிலையில், சாராவின் அழைப்புகளை அமீன் நிராகரித்துள்ளார். அப்போது தான் பெற்றோரின் மருத்துவச் செலவுக்கு என்று கூறி தன்னிடம் ரூ.10 லட்சத்தை வாங்கி அமீன் மோசடி செய்தது சாராவுக்கு தெரியவந்தது. இதனால், அதிர்ந்துபோன சாரா, சிவாஜிநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அமீனை தீவிரமாக தேடி வருகிறார்கள்.