கேரளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக் காரர் ஒருவர் போலீஸாரின் தொப்பியை அணிந்து கொண்டு, செல்பி எடுத்து இணையத்தில் பரவி விட்டார். அந்த செல்பி வைரலாகப்பரவியது. இதை அடுத்து, அந்த நபர் கட்சியில் இருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். அந்த நபர், பாஜக.,வினரை கண்மூடித் தனமாகத் தாக்கி காயப் படுத்தியதாக, போலீஸாரால் கைது செய்யப் பட்டு காவல் நிலையம் அழைத்து வரப்பட்டவர்.
அவரது படம் வைரலாகப் பரவியதை அடுத்து, தாங்கள் காவல்துறையின் உதவியுடன்தான் பாஜக.,வினர் மீது தாக்குதல் நடத்துகிறோம் என்பதைக் காட்டும் விதத்திலும், காவல் துறையினரின் துணையுடன் தான் இந்தத் தாக்குதல்கள் பாஜக.,வினர் மீது நடத்தப் படுகிறது என்பதைக் காட்டும் வகையிலும் அவர் செயல்பட்டுள்ளதாக கோட்டயம் மாவட்ட பாஜகவினர் புகார் தெரிவித்தனர். மேலும் இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தப் பட வேண்டும் என்றும் மாவட்ட சூப்பிரண்டண்டிடம் புகார் மனு அளித்துள்ளனர். இதனிடையே, கோட்டயம் மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி, குறிப்பிட்ட நபரை தற்காலிகமாக கட்சியை விட்டு நீக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பாஜக., வினரை தாக்கியதாக, குமரகத்தில் ஞாயிற்றுக்கிழமை இவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்து வரப்பட்டுள்ளார்.
இதனிடையே பாஜக மாவட்ட தலைவர் என்.ஹரி இதுகுறித்துக் குறிப்பிட்ட போது, குற்றம்சாட்டப்படும் கம்யூனிஸ்ட் இயக்கதவர்களுக்கு காவல் துறை எத்தகைய மதிப்பைக் கொடுக்கிறது என்பதைத்தான் நாங்கள் குறிப்பிட்டு வருகிறோம். ஆனால், இந்தப் படம் அதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. இந்தப் படம் காவல் நிலையத்தினுள் எடுக்கப்பட்டதா, அல்லது வேறுஎங்காவது வெளியில் எடுக்கப் பட்டதா என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது,.