எனதருமை நாட்டுமக்களே, கடந்த சில மாதங்களில் நாடு முழுவதும் ஒன்றுபட்டு கொரோனா பெருந்தொற்றோடு எவ்வாறு போராடியதோ, அது பல சந்தேகங்களைத் தவறு என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறது.
இன்று நமது நாட்டிலே நோயிலிருந்து மீண்டு வரும் recovery rate என்ற மீட்சி விகிதம், பிற நாடுகளோடு ஒப்பீடு செய்கையில் சிறப்பாக இருக்கிறது; நமது நாட்டில் கொரோனாவால் இறப்போர் எண்ணிக்கை உலகத்தின் பல நாடுகளைக் காட்டிலும் கணிசமாகக் குறைவானதாகவே இருக்கிறது.
ஒரு மனித உயிரின் இழப்புக்கூட துக்கமளிப்பது தான் ஐயமில்லை என்றாலும் இந்தியா, தனது இலட்சக்கணக்கான நாட்டு மக்களின் உயிர்களைக் காக்க வெற்றிகரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பதும் உண்மை. நண்பர்களே, இன்று கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் அபாயம் இன்னும் விலகி விடவில்லை.
பல இடங்களில் இது வேகமாகப் பரவியும் வருகிறது. நாம் அதிக முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டியது மிகவும் அவசியம். தொடக்கத்தில் இது எந்த அளவுக்கு அபாயகரமானதாக விளங்கியதோ, அதே அளவுக்கு இன்றும்கூட இருக்கிறது என்பதால் நாம் முழுமையான எச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும், ஒரு மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், தொடர்ந்து கைகளைக் கழுவி வர வேண்டும், எங்கும் துப்பக்கூடாது, தூய்மையின் மீது முழு கவனம் செலுத்த வேண்டும். இவையே கொரோனாவிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள நம்வசம் இருக்கும் ஆயுதங்கள்.
சில வேளைகளில் முகக்கவசம் தொல்லையளிப்பதாக இருக்கிறது என்று நாம் கருதி அதை அகற்றுகிறோம். பேசத் தலைப்படுகிறோம். எப்போது முகக்கவசம் அதிகம் தேவையாக இருக்கிறதோ, அந்த வேளையில் அதை அகற்றி விடுகிறோம். முகக்கவசம் காரணமாக சிரமம் ஏதேனும் இருக்கும் வேளையில், அதை அகற்றி விடலாம் என்று எண்ணும் நேரத்தில், ஒரு கணம், கொரோனாவோடு போராடிவரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கொரோனாவுடன் போராடிவரும் பிற போராளிகள் பற்றி சிந்தித்துப் பாருங்கள்; அவர்கள் மணிக்கணக்காக முகக்கவசம் அணிந்து கொண்டு, மனித உயிர்களைக் காக்கும் பெரும்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்கள்.
8 மணிநேரம், பத்து மணிநேரம் எனத் தொடர்ந்து முகக்கவசத்தை அணிந்தபடி இருக்கிறார்கள். அவர்களுக்கு சிரமமாக இருப்பதில்லையா!! சற்றே அவர்களை நினைத்துப் பாருங்கள், நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் நாமும் அசட்டையாக இருக்கக் கூடாது, மற்றவர்களையும் அப்படி இருக்க அனுமதிக்கக் கூடாது. ஒருபுறத்தில் நாம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முழு எச்சரிக்கையோடும், விழிப்போடும் போராட வேண்டி இருக்கிறது என்றால் வேறொரு புறத்தில் கடினமான உழைப்பால், தொழில், வேலை, படிப்பு என நாம் ஆற்றிவரும் கடமைகளில் வேகத்தைக் கூட்டியாக வேண்டும், அவற்றையும் புதிய சிகரங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
தொடர்ந்து அடுத்த அடுத்த பக்கங்களில் படியுங்கள்….