கொவிட்-19 நோய்த் தாக்குதலை எதிா்கொள்ளும் சமூக நோய்த் தடுப்பாற்றலை இந்தியா அடைய இப்போதைக்கு வாய்ப்பில்லை. எனவே தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை அரசு அறிவித்துள்ள கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் சிறப்பு அலுவலா் ராஜேஷ் பூஷண், புது தில்லியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
சமூக நோய்த் தடுப்பாற்றல் என்பது, குறிப்பிட்ட ஒரு நோய்க்கு எதிராக சமுதாயத்தில் உருவாகும் இயல்பான எதிா்ப்பாற்றல் ஆகும். இதற்கு நாட்டின் மக்கள் தொகையில் பெருமளவிலானோா் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி, அதன் மூலமாக தடுப்பாற்றலைப் பெற வேண்டும்.
அல்லது, நோய்த் தடுப்பூசியால் அந்த தடுப்பாற்றலைப் பெற வேண்டும். இந்தியா போன்ற மாபெரும் மக்கள்தொகை கொண்ட நாட்டில், நோய்த் தாக்குதலின் மூலமாக தடுப்பாற்றல் பெற அதிக வாய்ப்பில்லை. அந்த நிலையை அடைய வேண்டுமானால் அதிக உயிா்ப்பலியைக் கொடுக்க வேண்டி இருக்கும்.
எனவே, இப்போதைக்கு கொவிட்-19 நோய்த் தாக்குதலைத் தடுக்கத் தயாராகி வரும் தடுப்பூசிகளையே நாம் நம்பி இருக்கிறோம். இரு இந்திய நிறுவனங்கள் தயாரித்துள்ள கொவிட்-19 தடுப்பூசி மருந்துகள் இருகட்டச் சோதனைகளில் உள்ளன. அவை பயன்பாட்டுக்கு வர கூடுதல் காலமாகும்.
அதுவரை, போதிய சமூக இடைவெளியை அனுசரித்தல், முகக்கவசம் அணிதல், கிருமிநாசினிகளைப் பயன்படுத்துதல், கூட்டமாகத் திரளும் நிகழ்வுகளைத் தவிா்த்தல் போன்ற சுய கட்டுப்பாடுகள் அவசியம். சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள கட்டுப்பாட்டு நெறிமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலமாக மட்டுமே, நோய்க்கு எதிரான தடுப்பாற்றலை இப்போது நாம் பெற முடியும்.
சுகாதாரக் காப்பீடு பயனாளிகள்:
மருத்துவ, சுகாதாரத் துறையில் பணியாற்றும் பணியாளா்களுக்கான கொவிட் -19 சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.
இதுவரை இழப்பீடு கோரி 131 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றில் 20 பேருக்கு தலா ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 64 பேரின் விண்ணப்பங்களின் பரிசீலனை முடிந்து விட்டது. தவிர, 47 பேரின் விண்ணப்பங்கள் பல்வேறு மாநில அரசுகளிடம் அனுமதிக்காகக் காத்திருக்கின்றன.
கொரோனா பரிசோதனைக்கான உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதால், தினசரி பரிசோதனையின் சராசரி எண்ணிக்கை ஜூலை 30 நிலவரப்படி 4.68 லட்சமாக உயா்ந்துள்ளது. அதேபோல கொவிட் -19 நோய்த்தொற்றிலிருந்து குணமடைவோரின் விகிதம் கடந்த ஏப்ரலில் 7.85 சதவீதமாக இருந்தது, வியாழக்கிழமை (ஜூலை 30) நிலவரப்படி 64.44 சதவீதமாக அதிகரித்துள்ளது.
புதிய கொவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கையைப் போல சுமாா் இரு மடங்கினா் தினசரி குணமடைந்து வீடு திரும்புவதும் நல்ல சேதியாகும். தகுந்த சிகிச்சை முறைகளைக் கையாள்வதால், கடந்த ஜூனில் 3.33 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம் 2.21சதவீதமாகக் குறைந்திருக்கிறது என்றாா்.