கொரோனா பாதிப்பால் கணவன் உயிரிழந்ததால், மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸின் கோர தாண்டவத்தால் அன்புக்குரியவர்கள் பலரை இழந்து வருகிறோம். உலகளவில் 7,24,149 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது வேதனையான ஒன்று. பாதிப்புகள் ஒருபுறம் அதிகரித்து வந்தாலும், மற்றொரு புறம் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது.
கொரோனா தொற்று உறுதியானவர்களை தனிமைப்படுத்துவதால் மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அவர்கள் மட்டுமல்லாமல் குடும்பத்தினரும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
அந்த வகையில் தெலங்கானாவில், கணவன் கொரோனாவால் உயிரிழந்த சோகத்தில், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அமீர்பேட்டையை சேர்ந்த 58 வயதான டேச் விஜய்குமார் என்பவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கும், மகனுக்கும் கொரோனா தொற்று உறுதியானதால், இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
இதில் தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்ட விஜய்குமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மனைவிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவை வாங்குவதற்காக மகன் வெளியே சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த அவரது தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் கொரோனாவால் இறந்ததால் அவர் மிகுந்த வேதனை மற்றும் மன உளைச்சலில் இருந்ததாக மகன் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ என்றும் அவர் அச்சத்தில் இருந்ததாகவும் கூறியுள்ளார்