லடாக் பகுதிக்கு ராணுவ தளவாடங்களை எளிதாக, விரைவாக எடுத்துச் செல்லும் வகையில் சீனாவின் மிரட்டலையும் பொருட்படுத்தாமல், மணாலிக்கும், லேவுக்கும் இடையே புதிய சாலை அமைப்பதற்கான பணிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
லடாக் பகுதியில் இந்தியா அமைக்கும் மூன்றாவது சாலையாகும் இது. இந்த சாலை நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் ஒரு இணைப்புப் பாலமாக இருக்கும்.
இந்தியாவின் வடக்குப் பகுதியில் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படும், தவ்லத் பெக் ஓல்டி உள்பட சில இடங்களுக்கு தற்காலிகமாக மாற்றுப் பாதையை ஏற்படுத்த கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியா ஈடுபட்டுள்ளது. இதற்கான வேலைகளை ஏற்கனவே உலகின் மிகவும் உயரமான வாகங்கள் செல்லக் கூடியதான சாலையில் துவக்கப்பட்டுள்ளது.
தற்போது நிமு – பதம் – தார்ச்சா வழியாக மணாலி – லேவுக்கு மாற்றுப் பாதை அமைக்கப்படுகிறது. தற்போது உள்ள பாதை நீண்ட தூரமாக உள்ளது. ஸ்ரீநகரில் இருந்து சொஜிலா வழியாக செல்கிறது. மற்றொரு சாலை சர்சு வழியாக மணாலி – லே செல்கிறது.
புதிதாக அமைக்கப்படவிருக்கும் சாலை மூலம், மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை நேரம் மிச்சமாகும். இந்த பாதை அமைப்பதன் மூலம் லடாக் பகுதியில் கனரக வாகனங்களை நிறுத்துவது, இந்திய ராணுவத்தினரின் நகர்வுகள், ராணுவ டாங்குகளை நிறுத்துதல் போன்றவற்றை பாகிஸ்தான் அல்லது வேறு நாட்டு துருப்புகளால் கண்காணிக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சாலை இந்தியாவுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.