சென்னையில், பெண்ணைத் திருமணம் செய்து, அவர் குளிக்கும்போது வீடியோ எடுத்து அதைக் காட்டி மிரட்டி 20 லட்சம் ரூபாய் பறித்த ஆந்திராவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தையே போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அந்த 35 வயது பெண்; அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபருடன் 2006ம் ஆண்டு அந்தப் பெண்ணுக்குத் திருமணமானது; இந்த தம்பதிக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார். சென்னையில் வசித்து வந்த தம்பதி இணைந்து பைனான்ஸ் மற்றும் கட்டிடம் கட்டித் தரும் ஒப்பந்தத் தொழில் ஆகியவற்றை மேற்கொண்டு வந்தனர்
மகனின் பள்ளி ஆசிரியையுடன் கணவருக்கு தொடர்பிருப்பதாக அறிந்த அந்தப் பெண் விவகாரத்து பெற்று மகனுடன் தனியாக வசித்து வந்தார்.
அதேநேரம் அந்தப் பெண்ணும், அவரது கணவரும் தொழில் ரீதியாக தொடர்பில் இருந்து வந்துள்ளனர். அப்போது ஆந்திர மாநிலம் நெல்லூர் பாளையம் சந்திரபாடியம் என்ற பகுதியில் நடைபெற்ற கட்டிடப் பணி தொடர்பாக, சீனிவாச ரெட்டி என்பவருடன் பெண்ணின் கணவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. அவருடன் நட்பாகப் பழகிய சீனிவாச ரெட்டி, குடும்ப விவரங்களைத் தெரிந்து கொண்டு இருவரையும் சேர்த்து வைப்பதாகக் கூறி அந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்துப் பழகியுள்ளார்.
இதற்கிடையே பள்ளி ஆசிரியை, ஆந்திரா வரை வந்து பெண்ணின் கணவரை சந்தித்து சென்றதால் கணவருடன் சேர அந்தப் பெண் மறுத்து விட்டார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட சீனிவாச ரெட்டி தானும் மனைவியை விவகாரத்து செய்து தனியாக வாழ்வதால் திருமணம் செய்ய விரும்புவதாகத் தெரிவித்தார்.
பெண்ணும் சம்மதிக்கவே 2018ம் ஆண்டு இருவருக்கும் திருமணமானது. வரதட்சணையாக 90 சவரன் நகை போட்டு பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இருவரும் திருவொற்றியூரில் வசித்தபோது, அரிசி வியாபாரத்திற்கு பணம் வேண்டும் என சிறுக சிறுக மீனாவிடம் இருந்து 14 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார் சீனிவாச ரெட்டி.இதற்கிடையே மீனா கருவுறவே, சீனிவாச ரெட்டி அதைப் பல காரணங்கள் கூறி கலைக்கும்படி செய்து விட்டார். கடந்த 2 மாதங்களாக சீனிவாசன் வீட்டில் தங்காமல் வெளியூரிலேயே இருந்து வந்ததால் அந்தப் பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பெண்ணின் தீவிர விசாரணையில், சீனிவாச ரெட்டி சென்னை மாதவரத்தில் தன் முதல் மனைவி பத்மாவதி, தாய் சந்திரகலா மற்றும் உடன் பிறந்த சகோதரர் கிஷோர் ஆகியோருடன் வசித்து வந்தது தெரியவந்தது.
விவகாரத்து பெற்று விட்டதாகக் கூறி தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக அந்தப் பெண் சீனிவாச ரெட்டியிடம் கேட்க தகராறு ஏற்பட்டுள்ளது. வாங்கிய பணத்தையும் நகைகளையும் திருப்பித் தரும்படி அந்தப் பெண் கேட்க, சீனிவாச ரெட்டி தலைமறைவாகி விட்டார். சீனிவாச ரெட்டியின் தாய் சந்திரகலா அந்தப் பெண்ணை வீட்டிற்கு வரும்படி அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
முதல் மனைவி பத்மாவதி விலக வேண்டுமானால் 8 லட்சம் ரூபாய் வேண்டும் என சந்திரகலா பேசியுள்ளார். கணவர் தனக்கு வேண்டும் என்ற விருப்பத்தில் இருந்த அந்தப் பெண்ணும் 6 லட்சம் ரூபாயை உடனே கொடுத்துள்ளார். இதற்கிடையே, 2 நாட்கள் சந்திரகலாவுடன் அந்தப் பெண் தங்கியிருந்த போது அவர் குளிப்பதை சீனிவாச ரெட்டியின் தம்பி கிஷோர் மறைந்திருந்து வீடியோவாக எடுத்துள்ளார்.
அந்தப் பெண் தனது வீட்டிற்கு சென்றபின் அவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு வீடியோவின் ஸ்க்ரீன்ஷாட் அனுப்பி அதை வெளியிடாமல் இருக்க நகைகள், பணம் கேட்டு மிரட்டியுள்ளார் கிஷோர். அதிர்ச்சியடைந்த பெண், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு காவல் துணை ஆணையர் ஜெயலட்சுமியிடம் புகாரளித்தார்.
அந்ந புகார் மாதவரம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு போலீசாரின் தீவிர விசாரணைக்கு பின் வழக்கு பதிவு செய்து கிஷோர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சீனிவாச ரெட்டி மீது திருப்பதி, நெல்லுார், உதயகிரி, ஓங்கோல், விஞ்சமூர் காவல்நிலையங்களில், பாலியல் தொழில், பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது
மாதவரம் காவல்நிலையத்தில், சீனிவாச ரெட்டி, அவரது மனைவி பத்மாவதி, தாய் சந்திரகலா, தம்பி கிஷோர் ஆகிய ஒட்டுமொத்த குடும்பத்தின் மீது அவரது தந்தையைக் கொலை செய்ய முயன்ற வழக்கு நிலுவையில் உள்ளது.
அதில் மொத்த குடும்பமே கைதாகி ஜாமினில் வெளியே வந்துள்ளனர். சீனிவாச ரெட்டியின் தம்பி கிஷோர் மீது, மாதவரம், கொத்தவால் சாவடி, ஆந்திராவின் ஓங்கோல், விஞ்சமூர் காவல்நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
தலைமறைவாக உள்ள சீனிவாச ரெட்டி, முதல் மனைவி பத்மாவதி, தாய் சந்திரகலா ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.