அதிர்ச்சியளிக்கும் வகையில், ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் வங்கிக் கணக்குகளில் இருந்து ஒரு பெரிய தொகை மோசடியாக திரும்பப் பெறப்பட்டுள்ளது. போலி காசோலைகளைப் பயன்படுத்தி இரண்டு வங்கிகளில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராமர் கோவில் அறக்கட்டளையின் வங்கிக்கணக்கில் போலி காசோலை மூலம் ரூ.6 லட்சம் வரை பணம் எடுக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமர் அவதரித்த ராமபிரானுக்கே உரிய இடத்தில், ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, கோவில் கட்டுமான பணிகளைக் கவனித்துக் கொள்ள ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டது.
இந்த அறக்கட்டளைக்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் நிதியளித்து வருகின்றனர். கடந்த மாதம் வரை ரூ.30 கோடிக்கும் அதிகமாக நிதி வசூலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அறக்கட்டளையின் வங்கிக்கணக்கில் போலி காசோலை மூலம் பணம் எடுக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
போலி காசோலைகளைப் பயன்படுத்தி மர்மநபர் ஒருவர் இரண்டு முறை பணம் எடுத்ததாகவும், மோசடி நபர் மூன்றாவது முறையாக பணத்தை எடுக்க முயன்றபோது, ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய்க்கு தொலைபேசியில் இவ்வாறு பணம் திரும்பப் பெறுவது குறித்து தகவல் அளிக்கப் பட்டது. இதை அடுத்து இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. இதில், ரூ.6 லட்சம் வரை மோசடி நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக மோசடியில் ஈடுபட்ட மர்ம நபருக்கு எதிராக அயோத்தி காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அயோத்தியில் முன்னர் அறிவிக்கப் பட்ட விமான நிலையம் பகவான் ஸ்ரீராமர் பெயரில் சர்வதேச அந்தஸ்துடன் அமைகிறது. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் டிசம்பர் 2021 க்குள் விமான நிலையத்தை முடிக்க காலக்கெடுவை நிர்ணயித்துள்ளார்!
“அயோத்தியில் அமைகின்ற மிகப்பெரிய ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் போது, உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் பெரும் சுற்றுலாப் போக்குவரத்து இருக்கும் என்று அரசாங்கம் நம்புகிறது. விமான நிலையம் இதற்கு மேலும் வசதியான வகையில் அமையும்” என்று உ.பி. அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
“விமான நிலைய கட்டுமானத்திற்காக 525 கோடி ரூபாய்க்கு யோகி அரசு ஒப்புதல் அளித்துள்ளது, ஏற்கெனவே 300 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக அதிக நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன” என்று உத்தரபிரதேச சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நந்த் கோபால் நந்தி கூறியுள்ளார்.