நெருப்பு குச்சியின் மீது சோனூசூட் முகத்தை செதுக்கிய இளைஞர்.
பென்சிலால் படம் வரைவது வேறு. அந்த பென்சில் முனையையே அழகான வடிவமாக அமைப்பது வேறு. அது ஒரு அற்புதமான கலை. பென்சில் முனையில் கலை வடிவங்கள் செதுக்குவதவதற்கு மிகவும் பொறுமையும் திறமையும் வேண்டும்.
அப்படிப்பட்ட அற்புதமான நுண்மையான கலை வடிவத்தைச் செதுக்குவதில் தெலங்காணா ரங்காரெட்டி மாவட்டம் தாண்டூரைச் சேர்ந்த மைக்ரோ ஆர்டிஸ்ட் மதுசூதன் தேர்ச்சி பெற்றவர்.
சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மதுசூதன் மைக்ரோ ஆர்ட்டிஸ்டாக தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
அண்மையில் சோனூசூடால் பாராட்டப்பட்டதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
நெருப்புக் குச்சி மீது சோனூசூட் முகத்தைச் செதுக்கி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
பென்சில் முனையிலும் நெருப்புக் குச்சி மீதும் வடிவங்கள் செதுக்குவதில் மதுசூதன் நேர்த்தி பெற்றவர். பென்ஸில் லெட் மீது அவர் செதுக்கிய விநாயகர், மோடி, சத்ரபதி சிவாஜி, புத்தர், டீ கெட்டில் போன்றவை பிரத்தியேகமாக அவரை உலகுக்கு அடையாளம் காட்டிய சிறப்பம்சங்கள்.
2018 ல் எள் தானியத்தின் மீது இந்தியா மேப்பையும் அனுமான் உருவத்தையும் வரைந்து ரெக்கார்ட் படைத்தார் மதுசூதன். தற்போது ஹைதராபாத் நகரத்தில் மாசப்டாங்கில் உள்ள ஜவஹர்லால் நேரு ஆர்க்கிடெக்சர் அண்ட் ஃபைன் ஆர்ட்ஸ் இறுதியாண்டு படித்து வருகிறார். தந்தை பிர்காட் பாபு. தாய் ஆஷாபாயி. தந்தை 2016ல் மரணித்ததாக மதுசூதன் தெரிவித்தார்.
கடந்த 4 ஆண்டுகளாக 200க்கும் மேற்பட்ட கலை வடிவங்களை உருவாக்கியதாக கூறினார். 0.7 பென்சில் கார்விங் பிரிவில் பென்சில் லெட் மீது ஆங்கில எழுத்துக்களை செதுக்கிய மது, ராயல் சக்சஸ் இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இல் இடம் பிடித்துள்ளார்.
அதுமட்டுமல்ல. ஆசியா புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ், இண்டியா புக் ஆஃப் வேர்ல்ட் ரெகார்ட்ஸ் ஆகியவற்றுக்கு விண்ணப்பம் செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
எப்படியும் கின்னஸ் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்சில் இடம் பிடிப்பதே தன்னுடைய இலக்கு என்று அவர் கூறினார்.