10 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி -சி 49 ராக்கெட் நவ.7 சனிக்கிழமை இன்று மாலை 3:12க்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 10 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. பிஎஸ்எல்வி சி 49 பயணம் வெற்றிகரமாக அமைந்ததற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோதி தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
ஆந்திரமாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோவின், சதிஷ் தவான் ஏவு மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி -சி49 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப் பட்டது. இதில், இஸ்ரோவின் புவி ஆய்வு செயற்கைக் கோளான இஓஎஸ்-01 ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் (EOS-01) லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த ஒரு செயற்கைக்கோள், லக்சம்பர்க் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த தலா 4 செயற்கைகோள்கள் ஆகிய 9 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் இருந்தன.
பிஎஸ்எல்வி-சி49 ராக்கெட் ஏவுவதற்கான கவுண்ட் டவுன் நேற்று பகல் 1 மணிக்கு தொடங்கியது. சனிக்கிழமை இன்று பகல் 3.12க்கு பிஎஸ்எல்வி-சி 49 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப் பட்டது
ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட பிறகு இஸ்ரோ தலைவர் சிவன் பேசியபோது…
பிஎஸ்எல்வி.சி-49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. முதலில், இந்தியாவின் இஓஎஸ்.01 புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் பிரிந்தது. தொடர்ந்து அனைத்து செயற்கைக் கோள்களும் ஒவ்வொன்றாகப் பிரிந்தன. இவை அனைத்தும் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. நாம் தீபாவளிக்கு முன்பாகவே ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியுள்ளோம். கொரோனா காரணமாக, குறைந்த எண்ணிக்கையிலான விஞ்ஞானிகளை கொண்டு ராக்கெட்களை வடிவமைத்தோம். ராக்கெட் ஏவுதலில் பங்காற்றிய அனைவருக்கும் நன்றி… என்றார்.
இந்த செயற்கைக் கோளில் உள்ள சின்தடிக் அபர்சர் ரேடார் (synthetic aperture radar) மூலம் அனைத்து தட்ப வெப்பநிலைகளிலும் படங்களை எடுக்க முடியும்! விவசாயம், வனம் மற்றும் பேரிடர் மேலாண்மைக்கும் இந்த செயற்கைகோள் உதவும்!
இதனிடையே, பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி இஸ்ரோவு விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தமது டிவிட்டர் பதிவில், “பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு இஸ்ரோவையும் இந்திய விண்வெளி துறையையும் பாராட்டுகிறேன். கொரோனா நெருக்கடி காலத்தில் நமது விஞ்ஞானிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இதனை சாதிக்க பல்வேறு தடைகளைத் தாண்டியுள்ளனர்.,.. என்று குறிப்பிட்டுள்ளார்.