தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்துக்கு சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் ஒன்றாக வந்தனர். அதே போன்று பிரியங்கா காந்தியும் ராபர்ட் வதேராவும் வந்தனர். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து தான் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை கட்சியின் தேர்தல் அதிகாரி முல்லப்பள்ளி ராமச்சந்திரனிடம் ஒப்படைத்து காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து மகன் ராகுலிடம் காங்கிரஸ் தலைவர் பொறுப்புகளை ஒப்படைத்த சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு வாழ்த்து கூறி ஆசீர்வாதம் செய்தார்
47 வயதாகும் ராகுல் காந்தி 2013-ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் துணைத் தலைவராக பதவி வகித்து வந்த நிலையில் 19 ஆண்டுகளாக தனது தாய் சோனியா காந்தி வகித்து வந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி, ராஜிவ் காந்தி, சோனியா காந்தி, வரிசையில்நேரு குடும்பத்தைச் சேர்ந்த 6வது நபராக ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சித் தலைவராக பதவியேற்றுள்ளார்.