கர்நாடக மாநிலத்தில் ஆயுதப்படை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் வர்த்திகா கட்டியார் (வயது 34) ஐ.பி.எஸ். இவர் குடகு மற்றும் தார்வார் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.
இந்நிலையில், கடந்த 2011 ஆம் வருடத்தில் வர்த்திகா மகாராஷ்டிரா மாநிலத்தை சார்ந்த இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி நிதின் சுபாஷ் என்பவரை திருமணம் செய்தார். நிதின் பல்வேறு நாடுகளில் இருக்கும் இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த நிலையில், தற்போது தில்லியில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த வாரம் பெங்களூரில் உள்ள கப்பன் பார்க் காவல் நிலையத்தில் வர்த்திகா புகார் அளித்துள்ளார்.
இது குறித்த புகாரில், ” எனக்கும் – இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியான நிதின் என்பவருக்கும், கடந்த 2011 ஆம் வருடத்தில் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தின் போது, மணமகன் வீட்டின் சார்பில் அதிகளவு பணம் மற்றும் நகையை வரதட்சணையாக எதிர்பார்த்த நிலையில், வரதட்சணை கொடுக்காவிட்டால் திருமணத்தை நிறுத்திவிடுவோம் என்றும் மிரட்டினார்கள். இதனையடுத்து அவர்களுக்கு ரூ.3 இலட்சம் பணம் என் வீட்டார் சார்பாக வழங்கப்பட்டது.
பின்னர், கடந்த 2012 ஆம் வருடத்தில் உத்திரபிரதேசத்தில் வசித்த உவந்த எனது பாட்டியிடம், காசோலையில் ஏமாற்றி எழுதி வாங்கி ரூ.5 இலட்சம் பணத்தை நிதி மோசடி செய்திருந்தார். இது குறித்து அவரிடம் கேட்கையில், என்னை அடித்து கொடுமை செய்தார். இதனையடுத்து கடந்த 2016 ஆம் வருடத்தில் கொழும்பு செல்கையில், வரதட்சணை கேட்டு கொடுமை செய்தார்.
இந்த விஷயம் தொடர்பான தகராறில், என் மீது கட்டையால் தாக்கவே எனது கைகள் முறிந்தது. கடந்த 2018 ஆம் வருடத்தில் தீபாவளி பரிசு அனுப்பவில்லை என்று கூறி விவாகரத்து செய்யவுள்ளதாக தெரிவித்தார்.
நிதினிற்கு ஆதரவாக அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் செயல்பட்டு, என்னிடம் அதிக வரதட்சணை கேட்டு கொடுமை செய்கிறார்கள். புதிதாக ரூ.35 இலட்சம் வேண்டும் என்றும் கேட்கிறார்கள்.
இவர்களால் நான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல தொல்லையை அனுபவித்துள்ளேன். இனி இவர்களின் தொல்லையை தாங்க முடியாது. இவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் நிதின் உட்பட 7 பேரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்நாடக ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வரதட்சணை தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.