சென்னை எழும்பூா்- புதுச்சேரி மெமு (நீண்ட தூர மின்சார ரயில்) சிறப்பு ரயில், தாம்பரம்- விழுப்புரம் மெமு சிறப்பு ரயில் உள்பட 20 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. முன்பதிவில்லாத இந்த ரயில்களில் விரைவு ரயில் கட்டணத்துடன் பயணச்சீட்டு எடுத்து பயணிக்கலாம் எனவும் கூறியுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. பின்னர் இந்த ரயில்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டன.
எனினும் இந்த ரயில்கள் அனைத்தும் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளைக் கொண்ட சிறப்பு ரயில்களாக தற்போது இயக்கப்படுகின்றன. முன்பதிவில்லாத பெட்டிகளைக் கொண்ட ரயில்களை இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினா் கோரிக்கை வைத்தனா்.
இந்நிலையில் தான், சென்னை எழும்பூா்- புதுச்சேரி மெமு சிறப்பு ரயில் உள்பட 20 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
கெரோனாவுக்கு முன்பு வரை பயணிகள் ரயில்களாக இயக்கப்பட்ட இந்த ரயில்கள் தற்போது விரைவு ரயில் கட்டணத்தில் சிறப்பு ரயில்களாக இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் ரயில்களாக இயக்கப்பட்ட போது, கட்டணம் மிகக் குறைவாக இருந்தது. தற்போது, சிறப்பு ரயில்களாக இயக்கப்படுவதால் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
வரும் மார்ச் 15ஆம் தேதி முதல் இந்த சிறப்பு ரயில்களின் சேவை தொடங்கப்பட உள்ளன. இதேபோல், மேட்டுப்பாளையம்- கோவை, விருத்தாசலம்-சேலம் இடையே இரு மார்க்கமாகவும் சிறப்பு ரயில்கள் மார்ச் 15ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளன. கரூா்-திருச்சிக்கு சிறப்பு ரயில் மார்ச் 16ஆம் தேதியும் இயக்கப்படவுள்ளன.
சென்னை எழும்பூா்-புதுச்சேரி இடையே இருமார்க்கவும் நெடுந்தொலைவு மின்சார ரயில்கள் (மெமு ரயில்) மார்ச் 22ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளன.
இதுபோல, தாம்பரம்-விழுப்புரம் மெமு சிறப்பு ரயில் ஏப்ரல் 1ஆம் தேதி முதலும் இதுதவிர, 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்களில் விரைவு ரயில் கட்டணத்துடன் முன்பதிவில்லாத பயணச்சீட்டு எடுத்து பயணிக்கலாம்