ஆந்திர மாநிலம், மசூலிப்பட்டினம் அருகே உள்ள பட்லபெனுமர்ரு கிராமத்தில் 1876-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதி பிறந்தவர் பிங்கலி வெங்கய்யா. சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்டவர்.
வைர சுரங்கங்களை கையாள்வதில் நிபுணராக இருந்ததால் ‘டைமண்ட்’ வெங்கய்யா என்றும் பருத்தி வகைகளை அறிந்திருந்ததால் ‘பருத்தி’ வெங்கய்யா என்றும் அழைக்கப்பட்டார். எனினும் இவர் தனது 86-வது வயதில் வறுமையில் வாடி உயிர் நீத்தார்.
நமது நாட்டுக்கென தனி தேசியக் கொடி வேண்டும் என்று காந்தி பல முறை வலியுறுத்தி பேசியிருக்கிறார். இதையடுத்து, விதவிதமாக 30-க்கும் மேற்பட்ட கொடிகளை தயாரித்து, காந்தி 1921-ம் ஆண்டு விஜயவாடா வந்திருந்தபோது காண்பித்தார்.
அதை பார்த்த காந்தி, நடுவில் வெண்மை நிறம் இருக்கும்படி கொடியை உருவாக்க யோசனை கூறியுள்ளார். பின்னர் காந்தி கூறியபடி காவி, வெண்மை, பச்சை என முதலில் நம் தேசிய கொடியின் வர்ணம் உருவானது.
இந்நிலையில், தற்போது குண்டூர் மாவட்டம், மாசர்லாவில் உள்ள பி.டபிள்யூ காலனியில் வசித்து வரும் பிங்கலியின் மகளான சீதாமகாலட்சுமியை (99) ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேரில் சென்று சந்தித்தார்.
அப்போது அவர், ரூ. 75 லட்சத்திற்கான காசோலையை சீதாமகாலட்சுமிக்கு வழங்கி வணங்கினார்.
மேலும், பிங்கலியின் சுய சரிதை புத்தகத்தையும் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டு, இன்றைய இளைய தலைமுறையினருக்கு பிங்கலி வெங்கய்யாவின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ளும்படி செய்துள்ளார்.