கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்துள்ள மற்ற மாநிலங்களை போல் அல்லாமல், வெறும் அறிவிப்போடு நின்றுவிடாத ஜெகன் தலைமையிலான ஆந்திர அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவுகள், மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும், கொரோனா சிகிச்சை அளிக்க, தனியார் மருத்துவமனைகள் அதிகளவு கட்டணங்கள் வசூலித்து வருகின்றன.
அரசு கட்டணங்களை வகுத்தாலும் அது வெறும் பெயரளவில் மட்டுமே இருக்கிறது. அரசு நிர்ணயித்த தொகையை விட, பல மடங்கு கட்டணம் வசூலித்து கொண்டு தான் இருக்கின்றன.
ஆனால் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு பல அதிரடி நடவடிக்கைகளை, தைரியமாக எடுத்து அனைத்து தரப்பிலும் பாராட்டுக்களை பெற்றிருக்கிறது.
ஆந்திராவில், அரசு மருத்துவமனைகளில் அனைவருக்கும் இலவச கொரோனா சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
அரசு காப்பீட்டு திட்டமான ‘ஆரோக்கிய ஸ்ரீ’ திட்டம் மூலம், பல தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் கீழ் உள்ளவர்கள், இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
அதே சமயம், ரூ.5 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற, ஜெகன் அரசு குறைந்த கட்டணம் (ரூ.5,000 – ரூ.11000) நிர்ணயித்திருக்கிறது.வெறும் அறிவிப்போடு நின்றுவிடாமல், அதனை செயல்படுத்தவும் நடவடிக்கைகளை ஜெகன் அரசு எடுத்து வருகிறது.
இதுதொடர்பாக சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெகன், தனியார் மருத்துவமனைகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
கொரோனா காலத்தில், தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பது தெரிந்தால், அந்த மருத்துவமனையை மூடிவிட்டு, அரசே அதனை ஏற்று நடத்தும் என்றும், உடனடி நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்தால், 1902 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தெரிவித்ததுடன், அதனை விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரி ஒருவரையும் நியமித்திருக்கிறார்.