கொரோனா பெருந்தொற்று தொடங்கியதிலிருந்தே கொரோனா ஒருபுறம் பரவி வந்தால் வாட்ஸ்அப்பில் வதந்திகள் மறுபுறம் அதிவேகமாகப் பரவி வருகின்றன.
குறிப்பாக கொரோனா ஊரடங்கால் பல்வேறு துறைகளில் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல இளைஞர்கள் பலருக்கும் வேலை பறிபோகியுள்ளது.
புதிதாக பட்டதாரிகளாக இருப்பவர்களுக்கும் வேலைவாய்ப்பு குதிரை கொம்பாக இருக்கிறது. இப்படியிருக்கையில் எதாவது ஒரு வேலை கிடைத்துவிடாதா, உதவித்தொகை அரசு கொடுத்துவிடாதா என்ற ஏக்கத்தில் இளைஞர்கள் இருக்கின்றனர்.
இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி வதந்தி பரப்புவர்கள் வாட்ஸ்அப்களில் மத்திய அரசு வேலை கொடுக்கிறது, பணம் தருகிறது என இஷ்டத்திற்கு அடித்துவிடுகிறார்கள்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இளைஞர்களின் உணர்வுகளோடு விளையாடுகிறார்கள். அவர்களின் சமீபத்திய புரளி வீட்டிலிருந்தே வேலை கொடுக்கும் மத்திய அரசு. வாட்ஸ்அப்பில் பரவிவரும் அந்த வதந்தியில், “மத்திய அரசு பணம் சம்பாதிக்க புதிய மாடலை உருவாக்கியுள்ளது. .
லிங்கில் 50 ரூபாய் கொடுத்து உள்ளே நுழைந்தால் போதும். அதேபோல 300 ரூபாய் மூலதனத்துடன் கையில் ஒரு மொபைலும் இருந்தால் தினமும் 2 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் சம்பாதிக்கலாம்.
மாதம் 1 லட்சம் ரூபாய் கையில் கிடைக்கும்” என்று குறிப்பிட்டு ஒரு லிங்க்கும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வதந்தி மத்திய அரசின் உண்மை கண்டறியும் நிறுவனமான பிஐபி கவனத்திற்குச் சென்றது.
இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள பிஐபி செய்தி நிறுவனம், இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது. அரசு தொடர்பான எதுவாக இருந்தாலும் அந்தந்த அமைச்சகங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
தேவையில்லாமல் அந்த லிங்க்கை தொட்டு உள்ளே நுழைந்தால் உங்களின் பணம் பறிபோகவும் வாய்ப்பு உள்ளது என எச்சரித்துள்ளது.
It is being claimed in a #WhatsApp message that the Government of India in collaboration with an organisation is providing work from home opportunities.#PIBFactCheck:
— PIB Fact Check (@PIBFactCheck) August 23, 2021
▶️This claim is #FAKE
▶️No such announcement has been made by GOI
▶️Do not engage with such fraudulent links pic.twitter.com/hJ4MhMXphu