தாய், தந்தை, 17 வயது தங்கை மற்றும் பாட்டி என ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களையும் தான் தான் கொலை செய்ததாக 20 வயது மகன் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஹரியானா மாநிலம் ரோத்தக் நகரில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்தவர் பிரதீப் மாலிக், இவருக்கு வயது 45. கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதியன்று பிரதீப் மாலிக், விஜய் நகரில் உள்ள அவரது வீட்டில் அவரும், அவருடைய மனைவி சந்தோஷ் பப்லி (வயது 40), 17 வயதாகும் அவருடைய மகள் நேகா மற்றும் பப்லியின் தாயார் ரோஷ்னி தேவி ஆகியோர் துப்பாக்கியால் சுடப்பட்டு துடிதுடிக்க கொலை செய்யப்பட்டனர்.
17 வயதாகும் நேகா குண்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. குண்டு சத்தம் பக்கத்து வீட்டுக்காரருக்கு கூட கேட்கவில்லை என்பதை அறிந்த காவல்துறையினர் திகைத்துப் போயினர்.
இந்த கொலைகளை செய்தது யார் என்பதை கண்டறிய இரண்டு டி.எஸ்.பிக்கள் கொண்ட சிறப்பு காவல் குழுக்கள் அமைக்கப்பட்டது.
கொலை செய்யப்பட்ட பிரதீப் மாலிக்கின் 20 வயது மகன் அபிஷேக் மாலிக் , தனது சாட்சியத்தை பல முறை மாற்றிக் கூறிவந்ததால் அவர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அருகாமையில் இருந்த சிசிடிவி காட்சிகள் ஆராய்ந்த காவல்துறையினர் அபிஷேக்கின் நடத்தை, குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள், நிதி விவகாரங்கள் போன்றவற்றை பிரதீப் மாலிக்கின் சகோதரர் மூலமாக அறிந்து கொண்டனர்.
இதையடுத்து அபிஷேக்கிடம் துருவித்துருவி விசாரித்த போது, தான் தனது தந்தை, தாய், சகோதரி மற்றும் பாட்டியை கொலை செய்ததாக கூறி அதிரவைத்தார்.
குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக அபிஷேக் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளார். தனது தந்தையின் தொழில் சம்பந்தமாக அவருடனும், குடும்பத்தினருடனும் அபிஷேக்கிற்கு பிரச்னை இருந்துள்ளது.
இதன் காரணமாகவே துப்பாக்கியால் அனைவரையும் அவர் சுட்டுக் கொலை செய்துள்ளார். இது குறித்து காவல் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த கொலைகளின் பின்னணியில் அபிஷேக் மட்டும் தான் இருப்பதாக கூற முடியாது என கூறினார்.
விசாரணை தொடர்ந்து கொண்டிருப்பதால் இந்த கொலைகளின் பின்னணி இன்னும் முழுவதுமாக வெளியாகவில்லை.
இந்நிலையில் 20 வயது மகனே தந்தை, தாய், 17 வயது தங்கை, பாட்டி என 4 பேரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அபிஷேக் கல்லூரி மாணவர் என தெரியவந்துள்ளது.