இந்தியா நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட்
மூன்றாம் நாள் ஆட்டமும் நான்காம் நாள் வெற்றியும்
- முனைவர் கு வை பாலசுப்பிரமணியம்
இரண்டாம் நாள் ஆட்டத்தில் 21 ஓவரில், விக்கட் இழப்பின்றி 69 ரன் எடுத்திருந்த இந்திய அணி மூன்றாவது நாளில் தொடர்ந்து விளையாடியது. அடுத்த ஏழு ஓவரில் இந்தியா 100 ரன் எடுத்தது. எப்போதும் ஒரு நாளில் உணவு இடைவேளைக்குப் பிறகு ஸ்கோரிங் ரேட் அதிகமாக இருக்கும் என்றும், டெஸ்டின் மூன்றாவது நாள் ஸ்கோரிங் ரேட் அதிகமாக இருக்கும் என்றும் கூறுவார்கள். அதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டத்தில் 207 ரன்களும், நியூசிலாந்து அணி 140 ரன்களும் எடுத்தன. மொத்தம் 347 ரன்கள்.
இந்திய அணியின் மட்டையாளர்களின் தன்னம்பிக்கையை இந்த இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடும் கோலியின் முடிவு உயர்த்தியதா? என்பது கேள்விக்குறி. மாயங்க் 62 ரன், புஜாரா 47 ரன், ஷுப்மன் கில் 47 ரன், விராட் கோலி 36 ரன், ஷ்ரேயாஸ் ஐயர் 14 ரன், சாஹா 13 ரன் எடுத்தனர். அக்சர் படேல் 26 பந்துகளில் 4 சிக்சர், எ ஃபோர் உடன் 41 ரன் எடுத்தார். பின்னர் கோலி 7 விக்கட் இழப்பிற்கு 276 ரன்னுக்கு ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார்.
நியூசிலாந்து அணி விளையாட, இன்று 45 ஓவரும் மேலும் இரண்டு நாட்களும் பாக்கி இருந்தது. அந்த அணி 541 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்தொடங்கியது. ஆனால் அஷ்வின் சுழலில் அந்த அணியின் மட்டையாளர்கல் ஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழந்தனர். நாளின் இறுதியில் நியூசிலாந்து அணி ஐந்து விக்கட் இழப்பிற்கு 140 ரன் எடுத்திருந்தது. அஷ்வின் ஓராண்டில் 50 விக்கட் எடுத்து சாதனை புரிந்தார்.
இன்று நான்காம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய நியூசிலாந்து அணி ஜெயந்த் யாதவ் சுழலில் சிக்கி மேலும் 27 ரன்கள் சேர்ப்பதற்குள் அனைத்து விக்கட்டையும் இழந்து தோல்வியுற்றது. 45 நிமிட இன்றைய விளையாட்டில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வெற்றி பெற்றது.