― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாகாசி விசுவநாதர் ஆலயம் நெடுவழித் திறப்பு! சிறப்பு..!

காசி விசுவநாதர் ஆலயம் நெடுவழித் திறப்பு! சிறப்பு..!

- Advertisement -

காசி விசுவநாதர் ஆலயம் நெடுவழித் திறப்பு : டிசம்பர் 13, 2021
– முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் –

காசி அல்லது வாரணாசி தமிழ் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் சென்று பார்க்க விரும்பும் ஒரு புனிதத்தலம். ஆண்டு தோறும் பல குழுக்கள் தமிழகத்திலிருந்து காசி, கயா, பிரயாக் ராஜ் (முந்தைய அலஹாபாத்), அயோத்யா சென்று வருகின்றனர். தமிழகத்தில் பல இடங்களில் காசி விசுவநாதர் ஆலயம் என்ற பெயரில் பல ஆலயங்கள் இருக்கின்றன. குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இத்தகைய ஆலயங்களை பல இடங்களில் பார்க்கலாம்.

தமிழகத்தில் இருந்து காசிக்குச் செல்பவர்கள் பலவகையினர். முதல் வகை புனிதப்பயணம் செல்பவர்கள். இவர்களின் நோக்கம் பல திருத்தலங்களைத் தரிசித்தல், கங்கை நதியில் நீராடுதல் ஆகியவையாகும். இவர்கள் கயா, காசி, அயோத்யா, நமிசரண்யம், ஹரித்வார், ரிஷிகேஷ் ஆகியவற்றைப் பார்த்துவரும் வண்ணம் இவர்களது பயணத்திட்டம் அமையும்.

இரண்டாவது வகையினர் தமது மூதாதையருக்கு திதிகொடுக்கச் செல்பவர்கள். இவர்களில் அனைத்துச் சாதியினரும் அடங்குவர் என்றாலும் பிராமணர்கள் மிகக் குறிப்பாக இதற்கெனவே காசி யாத்திரை செல்வர். இவர்களது பயணம் பிரயாக் ராஜில் தொடங்கும்; காசியில் தொடரும். பின்னர் கயா வந்து மீண்டும் காசியில் முடியும்.

மூன்றாவது வகையினர் காசியைச் சுற்றிப் பார்க்க வரும் இளைஞர்கள். இவர்கள் வாரணாசியில் அஸ்ஸிகாட் என்ற இடத்தில் இருந்து வருணா காட் வரை காலை சூரிய உதய நேரத்தில் நடக்க விரும்புவார்கள். உண்மையில் அஸ்ஸி என்ற நதிக்கும் வருணா என்ற நதிக்கும் இடையில் உள்ள ஊர்தான் வாரணாசி. இங்கே 84 காட்கள் எனப்படும் படித்துறைகள் உள்ளன.

எந்த வகையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவரும் கண்டிப்பாக காசியில் விசுவநாதர் ஆலயம், விசாலாக்ஷி ஆலயம், அன்னபூரணி ஆலயம், கால பைரவர் ஆலயம், பிந்து மாதவர் ஆலயம் ஆகியவற்றிற்குச் செல்லுவர். விசுவநாதர் ஆலயத்திற்குச் சென்று வெளியில் வந்து “அடுத்தது நாம காசி விசுவநாதர் கோயிலுக்குத்தானே போகிறோம்?” எனக் கேட்டவர்கள் ஏராளம். “இப்ப பாத்துட்டு வந்ததுதான் காசி விசுவநாதர் ஆலயம்” என்று நாம் பதில் சொன்னால் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போவார்கள்.

ஒரு வீட்டின் நடுவே இருக்கும் துளசிமாடத்தைவிட சற்றே பெரியது காசி விசுவநாதர் கோயில். மணிகர்ணிகா காட்டில் குளிக்க முடியாது; ஏனென்றால் அது ஒரு சுடுகாடு; அங்கே எப்பொதும் பிணங்கள் எரிந்து கொண்டிருக்கும். அதன் அருகில் உள்ள லலிதா காட்டில் குளித்துவிட்டு, உலகிலேயெ மிகச் சிறிய சந்துகள் வழியே காசி விசுவநாதர் கோயிலுக்கு வந்தால், அங்கே தரை மட்டத்திற்குக் கீழே ஒன்றரை அடியில், அரையடி உயரத்திற்கு ஒரு லிங்க வடிவம் இருக்கும். அதுதான் காசி விசுவநாதர். நமது பயணத்திட்டத்தின் பரபரப்பில் நாம் கோயிலுக்குச் சென்று வந்ததையே மறந்து விடுவோம்.

அந்தக் கோயிலை பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் புனர் நிர்மாணம் செய்ய முடிவெடுத்தார். 2019இல் தொடங்கப்பட்ட அந்தப் பணி 2021, டிசம்பர் 13ஆம் தேதி ஓரளவு முடிவடைந்து அவரது திருக்கரங்களால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப் படுகிறது. அப்பணிகள் என்னென்ன எனப் பார்க்கலாமா?

படம் – பழைய வீடுகளுக்கு இடையில் காசி விசுவநாடர் ஆலயம் (இப்பொது நடக்கும் பணிகளுக்கு முன்னர்)

தமிழர்களுக்கும் காசி நகருக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. ‘செட்டியார் கடை’ என்ற பெயரில் தமிழ்ப் பெயர் பலகையுடன் பல கடைகள் இங்கே இருக்கின்றன. வாராணாசி இரயில் நிலையத்தில் இறங்கி ஆட்டோ ஓட்டுநரிடம் ‘நாட்கோட் செட்டி மட்’ என்று சொன்னால் நாட்டுக் கோட்டைச் செட்டியார் மடத்தில் கொண்டு விடுவார்கள். அந்த அளவிற்கு அந்த மடம் அங்கே பிரபலமானது.

சங்கர மடமும் இங்கே இருக்கிறது. அங்கே செல்பவர்களுக்கு பித்ரு காரியங்களை முறைப்படி, சரியான தக்ஷிணையுடன் செய்து வைக்கிறார்கள். குமரகுருபரர் மடமும் இங்குள்ளது. குமரகுருபரர் சிங்கத்தின் மீதேறி நவாபின் அரசவைக்குச் சென்றார் என்ற கதை தமிழகத்தில் மிகவும் பிரபலம்.

1916ஆம் ஆண்டு மகாத்மா காந்தி பனாரஸ் இந்து பல்கலைகழகத் திறப்பு விழாவிற்கு வந்திருந்தார். அப்போது அவர் காசி விசுவநாதர் ஆலயம் தூய்மை இல்லாமல் இருப்பதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அவர் சொல்வது கடந்த சில ஆண்டுகள் வரை பெரும்பாலும் உண்மைதான். மோதி அவர்கள் வாராணாசி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான பின்னர் அவர் முதலில் செய்த வேலை என்னவெனில் பிணங்களை எரிக்க மின் மயானங்களை உருவாக்கியதுதான்.

அதற்கு முன்னர் ஏராளமான மரக்கட்டைகள் பிணங்களை எரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டன. அந்த மரக்கட்டைகள் மணிகர்ணிகா காட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இப்போது அது 75 சதவிகிதம் குறைந்திருக்கிறது. வாராணாசியில் 1600க்குப் பின்னர் எந்தவித திட்டமிடலும் இல்லாமல் கட்டங்கள் கட்டப்பட்டுள்ளன.

காசியில் உள்ள தற்போதைய ஆலயம் 11ஆம் நூற்றாண்டில் ஹரி சந்திரா என்ற மன்னரால் கட்டப்பட்டது. அந்த ஆலயம் 1194ஆம் ஆண்டு குத்புதீன்-ஐபக்கால் இடிக்கப்பட்டது. 13ஆம் நூற்றாண்டில் குஜராத்தைச் சேர்ந்த ஒரு வணிகரால் மீண்டும் அமைக்கப்பட்டது. ஆனால் 1351இல் ஃபிரோஷா துக்ளக்கால் அந்த ஆலயம் மீண்டும் இடிக்கப்பட்டது. கிட்டதட்ட இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னர் அக்பரின் அமைச்சரான ராஜா தோடர்மல் அவர்களால் கோயில் மீண்டும் கட்டப்பட்டது. தோடர்மல் அக்பரின் நில அளவை திட்டத்திலும் நில வரி வசூலிப்பிலும் மிக முக்கியமான பங்கு வகித்தவர். ஆனால் 1669இல் ஔரங்கசீப்பால் ஆலயம் மீண்டும் இடிக்கப்பட்டதோடு, அங்கே ஒரு மசூதியும் கட்டப்பட்டது. இதற்கு ஞானவாபி மசூதி என்று பெயர். ஞானவாபி என்றால் ஞானக்கிணறு என்று பொருள்.

1780இல் மால்வா பகுதியை ஆண்ட மராத்திய இராணி அகல்யாபாய் ஹோல்கர் தற்போதிருக்கும் காசி விஸ்வநாதர் ஆலயத்தைக் கட்டினார். குவாலியர் இராச்சிய மன்னர் தௌலத்ராவ் சிந்தியாவின் விதவை இராணி பைசா பாய் என்பவர் 1828இல் ஞானக்கிணறு வளாகத்தில் கல் தூண்களை எழுப்பி ஒரு மண்டபத்தை நிறுவினார். செர்ரிங் (1868) என்ற ஆங்கிலேயர் ஞானக்கிணறு வளாகத்தில் 4 வரிசையில் அமைந்த, 40 கல் தூண்களைக் கொண்ட மண்டபம் குறித்து தம் கட்டுரையில் குறித்துள்ளார். ஞானக் கிணறு மண்டபத்தின் கிழக்கு திசையில், நேபாள மன்னர் நன்கொடையாக வழங்கிய சிவபெருமானின் வாகனமான நந்தியின் 7 அடி உயர சிலை அமைந்துள்ளது. கல் தூண் மண்டபத்தின் கிழக்கில் ஐதராபாத் இராச்சிய நிஜாமின் மனைவி வழங்கிய நன்கொடையில் நிறுவப்பட்ட சிவன் கோயில் அமைந்துள்ளது.

வாராணாசியைப் புணரமைக்கப் பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1790இல் பொதுக் கழிப்பறைகள் பிரிட்டிஷாரால் கட்டப்பட்டன. 1822இல் ஜேம்ஸ் பிரின்சப் என்பவர் வாரணாசியின் வரைபடத்தைத் தயாரித்தார். 1823 முதல் 1867 வரையிலான காலகட்டத்தில் நகர்ப்புற சுகாதாரத்திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டது. பின்னர் கழிவுநீர்க் குழாய்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. 1916இல் வாரணாசிக்கு வந்த மகாத்மா காந்தி அவர்கள் கோயில் பகுதிகளை இன்னமும் தூய்மையாக வைத்துக்கொள்ள வலியுறுத்தினார்.

எத்தனை முயற்சிகள் செய்தும் வாரணாசி தூய்மையடையவில்லை. காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்லும் வழி குறுகலாகவும், கடைகள் நிறைந்ததாகவும், மாடுகள் உலாவும் இடமாகவும் இருந்தது. பாரதப்பிரதமர் திரு நரேந்திர மோதி அவர்கள் வாரணாசி தொகுதி பாராளுமன்ற உறுப்பினரானதும், அதோடு பிரதமரானதும் காசி விஸ்வநாதர் கோயிலைப் புதுப்பிக்க முடிவெடுத்தார்.

2019இல் அடிக்கல்!

2018ஆம் ஆண்டு காசி விஸ்வநாத் கோயில் பகுதி சிறப்பு வளர்ச்சிக் குழு அமைக்கப்பட்டது. அது கங்கைக் கரையிலிருந்து காசி விஸ்வநாதர் ஆலயம் வரை உள்ள சுமார் 8.2 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி உலகத் தரத்தில் ஒரு ஆலய வளாகத்தையும் ஆலய நெடுவழியையும் அமைக்க முடிவுசெய்யப்பட்டது. மார்ச்சு 2019ஆம் ஆண்டு பிரதமர் மோதி அவர்கள் இதற்கான அடிக்கல் நாட்டினார்.

படம் – காசி விஸ்வநாதர் ஆலய வளாகம் ஆலய நெடுவழி உருவக்கப்பட இருக்கும் பகுதி.

காசி அல்லது வாராணாசி ‘வருணா’, ‘அசி’ என்ற இரு நதிகளுக்கு இடையில் உள்ள நகரம். அசி என்ற நதி நகரத்தின் தெற்கிலும், வருணா நதி நகரத்தின் வடக்கிலும் உள்ளன. தற்போது ‘தச அஸ்வமேத காட்’ என்ற படித்துறையிலிருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்லும் வழி அதிகமான பேரால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இம்மாதம், டிசம்பர் 13ஆம் நாள் தச-அஸ்வமேத காட்டிற்கும் மணிகர்ணிகா காட்டிற்கும் இடையில் உள்ள லலிதா காட் மற்றும் ஜலசேன் காட் ஆகியவற்றிலிருந்து சுமார் 800 மீட்டர் நடந்தால் கோயிலை அடையும் வண்ணம் காரிடோர் என ஆங்கிலத்தில் வழங்கப்படும் நெடு வழி தொடங்கிவைக்கப்பட உள்ளது. இது கங்கை நதிக்கும் ஆலயத்திற்குமான நேரடிப்பாதையாகும். ரூ 900 கோடியில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், புனரமைக்கப்பட்ட ஆலயம், ஆலய வளாகம், வாரணாசி நகரம் பற்றிய காட்சியகம், ஓர் அருங்காட்சியகம், கலையரங்கம், பக்தர்கள் நல மையம், உணவு விடுதி, புத்தகக் கடை, திருத்தியமைக்கப்பட்ட லலிதா காட் மற்றும் ஜலசேன் காட், லலிதாகாட்டில் ஒரு உயரமான மேடை, இரண்டு படகுத்துறைகள் அனைத்தும் அமைக்கப்பட உள்ளன.

படம் – காசி நகரின் வரைபடம்

கோயில் வளாகத்தினுள் அகல்யாபாய் ஹோல்கர், ஆதிசங்கராச்சார்யா, பாரதமாதா, கார்த்திகேயன் (முருகன்), பார்வதி தேவி, அன்னபூரணி, விநாயகர், ஹனுமார், சத்யநாராயணா ஆகியோரின் சிலைகளும் அமைக்கப்பட உள்ளன.

படம் – புதிய காசி விசுவநாதர் ஆலயம், ஆலய வளாகம், அதனை கங்கை நதியுடன் இணைக்கும் நெடுவழி.

தென்னாடு உடைய சிவனுக்கு, என்னாட்டவரும் போற்றும் இறைவனுக்கு, மன மகிழ்வோடு ஒரே சமயத்தில் ஒரு லட்சம் மக்கள் சென்று வரும் வகையில் மிகச் சிறந்த திட்டம் தீட்டி அதனைச் செயல்படுத்தியுள்ள பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோதி அவர்களை வாழ்த்துவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version