IPL 2022 –குஜராத் vs ராஜஸ்தான்
– K. V. பாலசுப்பிரமணியன்
ஹர்திக் பாண்ட்யாவின் சிறப்பான ஆட்டம்
நேற்று, ஏப்ரல் பதிநான்காம் நாள் குஜராத், ராஜஸ்தான் அணிகளுக்கிடையே மும்பையின் டி.ஒய். பட்டீல் கிரிக்கெட் மைதானத்தில், ஐ.பி.எல்லின் 24ஆவது போட்டி நடந்தது. குஜராத் டைட்டன்ஸ் (4 விக்கெட்டுக்கு 192 – பாண்டியா 87*, மனோகர் 43, பராக் 1-12) ராஜஸ்தான் ராயல்ஸை (ஒன்பது விக்கட் இழப்பிற்கு 155 ரன் – பட்லர் 54, ஹெட்மயர் 29, பெர்குசன் 3-23, தயால் 3-40) 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
ஹர்திக் பாண்டியா மூன்று துறைகளிலும் முன்னணியில் இருந்து விளையாடினார். அதாவது ஒரு பேட்டராக 52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் எடுத்தார்; ஒரு பவுலாராக ஒரு விக்கெட்டை எடுத்தார்; ஒரு ஃபீல்டராக ஒரு ரன்-அவுட் செய்தார்; டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைத் தந்தார்.
ஐந்து ஆட்டங்களில் நான்கு வெற்றிகளுடன், ஐபிஎல் 2022இன் புள்ளிப்பட்டியலில் டைட்டன்ஸ் இப்போது முதலிடத்தில் உள்ளது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் குஜராத் அணியை மட்டையாடச் சொன்னது. இரண்டாவது ஓவரில் மேத்யூ வேட் ரன் அவுட் ஆனார். மூன்றாவது ஓவரில் விஜய ஷங்கர் அவுட்டானார். அப்போது ஹர்திக் களமிறங்கினார். அணியின் ஸ்கோர் 53ஆக இருக்கும்போது ஏழாவது ஓவரில் ஷுப்மன் கில் அவுட்டானார்.
பிறகு, பாண்டியா மற்றும் மனோகர் நான்காவது விக்கெட்டுக்கு 55 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்தனர். பாண்டியாவும் மில்லரும் கடைசி மூன்று ஓவர்களில் 47 ரன்கள் எடுத்து குஜராத் அணியின் ஸ்கோரை 192 ரன்னுக்கு கொண்டு சென்றனர்.
இராஜஸ்தான் ஆடத் தொடங்கியபோது ஜோஸ் பட்லர் துரத்தலை ஸ்டைலாகத் தொடங்கினார், ஆனால் மற்ற ராயல்ஸ் பேட்டர்கள் சரியாக ஆடவில்லை. குஜராத் அணியின் பந்துவீச்சாளர் லாக்கி பெர்குசன் சிறப்பாக பந்து வீசினார்; 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
ரஷித் கான் தனது நான்கு ஓவர்களில் 24 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். மேலும் அறிமுக வீரர் யாஷ் தயாள் தனது முதல் இரண்டு ஓவர்களில் 33 ரன்கள் கொடுத்தபோதிலும் இறுதியில் 40 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
ராயல்ஸ் இன்னிங்ஸின் 18வது ஓவரின் மூன்றாவது பந்து வீசியதும் பாண்டியா தொடை பிரச்சனையுடன் மைதானத்திற்கு வெளியே சென்றது டைட்டன்ஸ் அணிக்கு தற்போது கவலையாக உள்ளது.