ஐபிஎல் 2022 – 19 ஏப்ரல் 2022 பெங்களூரு vs லக்னோ
– K.V. பாலசுப்பிரமணியன் –
நேற்று, ஏப்ரல் பத்தொன்பதாம் நாள் பெங்களூரு, லக்னோ அணிகளுக்கிடையே மும்பையின் டி.ஒய். பட்டீல் கிரிக்கெட் மைதானத்தில், ஐ.பி.எல்லின் 31ஆவது போட்டி நடந்தது. பெங்களூரு அணி (181/6, ட்யூ பிளசிஸ் 96, சமீரா 2/31, ஹோல்டர் 2/25) லக்னோ அணியைத் (163/8, க்ருணால் பாண்ட்யா 42, ராகுல் 30, ஹேசல்வுட் 4/25) தோற்கடித்தது.
டாஸில் வெற்றிபெற்ற லக்னோ அணி பெங்களூரு அனியை மட்டையாடச் சொன்னது. முதல் ஓவரில் தொடக்க வீரர் அனுஜ் ராவத்தும் விராட் கோலியும் ஆட்டமிழந்தனர். ஆறாவது ஓவரில் க்ளென் மேக்ஸ்வெல்லும் எட்டாவது ஓவரில் சுயேஷ் பிரபு தேசாயும் அவுட்டாயினர். ட்யூ ப்ளேசிஸும் ஷபாஸ் அகமதும் ஸ்கொரை உயர்த்தினர். இரண்டு சிக்சர், 11 ஃபோருடன் 64 பந்துகளில் ட்யூ ப்ளேசிஸ் 96 ரன் அடித்தார். பெங்களூரு அணி இருபது ஓவர் முடிவில் ஆறு விக்கட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.
அடுத்து விளையாட வந்த லக்னோ அணியின் தொடக்க வீரர் டி காக் 3 ரன் எடுத்து மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார். மனீஷ் பாண்டேயின் குறைந்த ஸ்கோரில் அவுட் ஆவது இந்த மேட்சிலும் தொடர்ந்தது. ராகுல் 30 ரன்னுக்கு எட்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் க்ருணால் பாண்ட்யா (42 ரன்) எடுத்தார். அவரைத் தவிர பிறர் சோபிக்க வில்லை. இருபது ஓவர் முடிவில் அந்த அணியால் 163 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே லக்னோ அணி பெங்களூருவிடம் தோற்றுப்போனது.
19ஆவது ஓவரின் முதல் பந்து ஒரு மிகப்பெரிய வைட் பால். ஆனால் அம்பயர் அதனை வைட் என கொடுக்கவில்லை. அடுத்த பந்திற்கு ஸ்டொனிஸ் ஸ்டம்புகளைவிட்டு மிகவும் விலகி வந்து ஆட முயற்சி செய்து, பந்து பேட்டில் பட்டு ஸ்டெம்பை வீழ்த்தியது. ஸ்டோனிஸ் அதற்காக கெட்ட வார்த்தை சொல்லிக் கூச்சலிட்டார். அநேகமாக அதற்கு அவருக்கு தண்டனை இருக்கும்.