கொல்கொத்தா vs டெல்லி
- K.V. பாலசுப்பிரமணியன்
நேற்று, ஏப்ரல் இருபத்தியெட்டாம் நாள் கொல்கொத்தா, டெல்லி அணிகளுக்கிடையே மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில், ஐ.பி.எல்லின் 41ஆவது போட்டி நடந்தது.
கொல்கொத்தா அணி (146/9, ஷ்ரேயாஸ் ஐயர் 42, நித்தீஷ் ராணா 57, ரிங்கு சிங் 23, முஸ்தாஃபிசுர் ரஹ்மான் 3/18, குல்தீப் யாதவ் 4/14) டெல்லி அணியிடம் (150/6, வார்னர் 42, போவல் 33, அக்சர் படேல் 24, லலித் 22, உமேஷ் 3/24) தோற்றுப்போனது.
டாஸ் வென்ற டெல்லி அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. எனவே கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள், ஆரோன் ஃபின்ச், வெங்கடேஷ் ஐயர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இன்றைய போட்டியில் அறிமுகமான விக்கட் கீப்பர் பேட்ஸ்மென், தமிழக வீரர், பாபா இந்திரஜித், சுனில் நரேன் இருவரும் கூட சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அப்பொது அணியின் ஸ்கோர் 4 விக்கட் இழப்பிற்கு 35. ரன்ரேட்டும் மிகக் குறைவாக இருந்தது.
ஷ்ரேயாஸ் ஐயரும் நித்தீஷ் ராணாவும் இணைந்து ஸ்கோரை உயர்த்தினர். ரிங்கு சிங் 16 பந்துகளில் 23 ரன் அடித்தார். இவர்களால் கொல்கொத்தா அணி 20 ஓவர் முடிவில் ஒன்பது விக்கட் இழப்பிற்கு 146 ரன் எடுத்தது.
147 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற எளிய இலக்கோடு ஆட ஆரம்பித்த டெல்லி அணிக்கு முதல் பந்தில் அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடி மட்டையாளர் ப்ருத்விஷா முதல் பந்தில் ஆட்டமிழந்தார். வார்னர் (42 ரன், 26 பந்துகள்), மார்ஷ் (13 ரன், 7 பந்துகள்), லலித் யாதவ் (22 ரன், 29 பந்துகள்) மூவரும் சிறப்பாக ஆடினர்.
ஆறாவது விக்கட்டாக அக்சர் படேல் ஆட்டமிழந்தபோது 30 பந்துகளில் 34 ரன் அடிக்கவேண்டியிருந்தது. அதன் பின்னர் போவல் 3 சிக்சர், ஒரு ஃபோர் அடித்து டெல்லி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.