காந்திநகர்:
குஜராத் மாநிலத்தில் அண்மையில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது. அதில் வெற்றி பெற்று ஆட்சி அமைந்ததைப் போல், அதே விதத்தில் உள்ளாட்சித் தேர்தலிலும் பாஜக., வெற்றி பெற்றது. ஆனால், கடந்த முறை பெற்ற இடங்களில் இருந்து குறைவாகவே பெற்றுள்ளது. காங்கிரஸ் கடந்த முறை பெற்ற இடங்களை விட 5 இடங்கள் கூடுதலாகப் பெற்றுள்ளது.
குஜராத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சனிக்கிழமை தேர்தல் நடந்தது. 74 நகராட்சிகள், இரண்டு மாவட்ட பஞ்சாயத்துகள், 17 தாலுகா பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டடன.
74 நகராட்சிகளில் பாஜக 47 ல் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 16 இடங்களில் வென்றது. 6 இடங்களில் எந்த வேட்பாளருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 4 இடங்களில் சுயேட்சைகள் வெற்றி பெற்றனர்.
முன்னதாக, 2013ல், 79 முனிசிபாலிடிகளில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக 59 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸ் 11 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. தற்போது பாஜக., தன் இடங்களில் சிலவற்றை இழந்துள்ளது. காங்கிரஸ் 5 இடங்கள் கூடுதலாகப் பெற்றுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 99 இடங்களில் வெற்றி பெற்று, பெரும்பான்மைக்கு 8 இடங்களே கூடுதலாகப் பெற்றது. சாதி ரீதியான ஒதுக்கீட்டுப் பிரசாரங்களாலும் சாதிய கட்சித் தலைவர்களைக் கூட்டணி போட்டுக் கொண்டதாலும் காங்கிரஸ் 77 இடங்களில் வெற்றி பெற்றது. அது முந்தைய தேர்தலை விட 17 இடங்கள் கூடுதலாகப் பெற்றது குறிப்பிடத் தக்கது.