ஹைதராபாத் : ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து நமாபல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 2007ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதி சார்மினார் அருகே உள்ள மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுவாமி அசீமானந்தா உள்ளிட்ட 5 பேர், என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தால் வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளனர்.
ஹைதராபாத்தில் மெக்கா மசூதியில் 2007ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 8 பேர் கொல்லப்பட்டனர். 58 பேர் காயமடைந்தனர்.
குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக சுவாமி அசீமானந்தா, மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ஆர்எஸ்எஸ். முன்னாள் பிரசாரகர்கள் சுனில் ஜோஷி, சந்தீப் டாங்கே, ஆர்எஸ்எஸ் தொண்டர் ராமசந்திர கல்சங்க்ரா, தேஜ்ராம் பார்மர், அமித் சௌஹான் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்களில் சுனில் ஜோஷி வழக்கு விசாரணையில் இருந்தபோதே மர்மமான முறையில் கொல்லப்பட்டார். சந்தீப் டாங்கே, ராமச்சந்திர கல்சங்க்ரா இருவரும் தலைமறைவாயினர். தேஜ்ராம் பார்மர், அமித் சௌஹான் ஆகியோரின் தொடர்பு குறித்த விசாரணை முற்றுப் பெறாமல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வந்தது. அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு தொடர்பில் 226 சாட்சியங்கள் விசாரிக்கப் பட்டுள்ளன. 411 கோப்புகள் கொடுக்கப் பட்டுள்ளன.
இவர்களில் சுவாமி அசீமானந்தா, மோகன்லால் ரதேஸ்வர் இருவரும் பிணையில் வெளியில் வந்துவிட்டனர். மற்ற மூவரும் ஹைதராபாத் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட எஞ்சிய 5 பேரின் தொடர்பு குறித்த வழக்கு விசாரணை ஹைதராபாத்தின் நம்பள்ளியில் என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று இன்று தீர்ப்பு வழங்கப் பட்டது. அந்தத் தீர்ப்பில், இவர்களுக்கும் இந்த வழக்கின் தொடர்புக்கும் போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறி சுவாமி அசீமானந்தா உள்ளிட்ட 5 பேரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.