நீதிபதி லோயாவின் மரணம் இயற்கையானது என்பதில் எந்த சந்தேகமுமில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், மலிவான அரசியல் லாபம் தேட நீதிமன்றத்தை பயன்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளது. அரசியல் காரணங்களுக்காக வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, பிரஷாந்த் பூஷன் , இந்திரா ஜெய் சிங் ஆகியோர் நீதிமன்றத்தை அவமதிக்கும் வாதங்களை முன்வைத்தனர் எனினும், இந்த வழக்கைத் தொடர்ந்தவர்கள் அவமதிப்பு குற்றம் புரிந்துள்ளனர் என்று கூறியது.
மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரிஜ்கோபால் ஹரிகிருஷ்ணன் லோயா (48), கடந்த 2014 டிசம்பர் 1-ஆம் தேதி நாக்பூரில் சக நீதிபதியின் குடும்ப திருமண விழாவுக்கு சென்றபோது மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் குஜராத்தின் சொராபுதீன் என்கவுன்டர் வழக்கை விசாரித்து வந்தார். இந்த வழக்கில் தற்போதைய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், லோயா மரணத்துக்குப் பிறகு, அந்தப் பதவிக்குப் பொறுப்பேற்ற நீதிபதி, வழக்கில் இருந்து அமித் ஷாவை விடுவித்து உத்தரவிட்டார். எனவே, “நீதிபதி லோயா மரணம் இயற்கையானது அல்ல” என்று குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிபதி லோயா மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் எனவே இதுகுறித்து சுதந்திரமான சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் பிரமுகர் தெசீன் பூனவாலா, பத்திரிகையாளர் பி.ஆர்.லோன் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், நீதிபதி லோயா மரணம் தொடர்பில் மீண்டும் விசாரணை நடத்த தேவையில்லை என மகாராஷ்டிரா மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. இரு தரப்பு வாதங்களும் கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு விசாரணை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளித்தனர். இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், லோயாவுடன் பொறுப்பில் இருந்த நீதிபதிகள் அளித்த அறிக்கைகள் மீது எந்த சந்தேகமும் இல்லை என்றும், மனுதாரர்களின் முயற்சியானது நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல் என்றும் கூறிய நீதிமன்றம், சுதந்திரமான விசாரணை கேட்பது நீதித்துறை மீதான தாக்குதல் எனக் கூறியது. மேலும், அரசியல் போட்டிகள் ஜனநாயக அரங்கில் தீர்க்கப்பட வேண்டும் என நீதிபதிகள் தெளிவாகக் கூறினர்.
இதனால் அமித் ஷா மீது களங்கம் சுமத்தி பொய் வழக்கு போட்ட காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களின் முகத்திரை கிழிந்துள்ளதாக பாஜக.,வினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.