லக்னோ: காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும், காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினருக்கு தாஜா செய்து பெரும்பான்மையினரை காவு வாங்கும் கட்சி என்று பரவலாகக் குற்றச்சாட்டுகள் எழுப்பப் பட்டு வந்தாலும், அவ்வப்போது அதை காங்கிரஸ் கட்சியில் இருக்கும் இஸ்லாமியத் தலைவர்கள் வெளிப்படுத்தி வருவார்கள்.
அந்த வகையில் ஒரு கருத்தைச் சொல்லி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் சல்மான் குர்ஷித். காங்கிரஸ் கட்சியினரின் கைகளிலும் முஸ்லிம்களின் ரத்தக்கறை படிந்துள்ளது என சல்மான் குர்ஷித் தெரிவித்த கருத்து கட்சிக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில், மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சல்மான் குர்ஷித். அப்போது அவர், பாபர் மசூதி இடிப்புக்கு பின் நடந்த கலவரங்களில், காங்கிரஸ் கட்சியினர் கைகளிலும், முஸ்லிம்களின் ரத்தக்கறை படிந்திருந்தது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஏனென்றால் அப்போது காங்கிரஸ்தான் மத்தியில் ஆட்சி செய்தது. ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் உங்கள் கரங்களிலும் அதுபோன்ற ரத்தக்கறை இனி படியக் கூடாது என்று பேசினார்.
காங்கிரசில் இருந்து கொண்டு, சர்ச்சைக்குரிய அயோத்தி கட்டட இடிப்புக்கு பாஜக.,வை மட்டுமே குற்றம் சுமத்திப் பேசி வந்த காங்கிரஸார், இப்போது, அதில் தங்கள் பங்கும் இருப்பதை ஒப்புக் கொண்டு பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.