உலக அளவில் அதிகம் பேர் பயன்படுத்தும் சமூக ஊடகமான ஃபேஸ்புக்கில் உலக அளவில் அதிக அளவு பின்தொடரப்படும் புகழ்பெற்ற உலகத் தலைவராக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி திகழ்கிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை விட மோடியின் புகழ் வளர்ந்துள்ளது. இருப்பினும் இன்னொரு சமூக ஊடகமான டிவிட்டரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலிடத்திலும், அடுத்த இடத்தில் பாரதப் பிரதமர் மோடியும் உள்ளனர்.
இதற்குக் காரணம், ஆசிய நாடுகளில் பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்றும், அமெரிக்காவில் டிவிட்டரை பயன்படுத்துவோர் அதிகம் என்றும் கூறப் படுகிறது.
ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவா நகரைச் சேர்ந்த புர்சன் கோன் அன்ட் உல்ப் என்ற நிறுவனம் ஃபேஸ்புக்கில் உலகத் தலைவர்கள் குறித்த ஆய்வை மேற் கொண்டது. சமூக வலைதளங்களில் அதிகமானோர் பின்தொடரும் உலக தலைவர்கள் குறித்து புர்சன் – மார்ட்ஸ்டெல்லர் ஆகிய தொலை தொடர்பு நிறுவனங்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன.
இந்த ஆய்வுக்காக 14 மாதங்கள் அந்நிறுவனம் செலவிட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 1ல் இருந்து பல்வேறு நாடுகளின் தலைவர்களின், அமைச்சர்களின் 650 ஃபேஸ்புக் பக்கங்கள் இதற்காக ஆய்வு செய்யப்பட்டன. இதில், ட்விட்டரில் அதிகமானவர்கள் பின்தொடரும் தலைவராக அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளார்.
பேஸ்புக்கில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து வேகமாக அதிகரித்து வரும் உலக தலைவராக பிரதமர் மோடி இருந்து வருகிறார். இவரை 4.32 கோடி பேர் பின் தொடர்கின்றனர். பேஸ்புக் அதிகம் பயன்படுத்துபவர்கள் இருக்கும் கம்போடிய நாட்டு பிரதமர் ஹூன் ஷென் 5-வது இடத்தில் உள்ளார். இவரை 96 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
கடந்த 14 மாதங்களில் பேஸ்புக்கில் டிரம்ப் 20.49 கோடி கமன்ட்களையும், லைக்குகளையும், ஷேர்களையும் பெற்றுள்ளார். டிரம்ப் சராசரியாக ஒரு நாளைக்கு 5 முறை கருத்து பதிவிடுறார்.
மோடியை பேஸ்புக்கில் 4.32 கோடி பேரும் ட்விட்டரில் 2.31 கோடி பேரும் பின்தொடர்கின்றனர். ஆசிய அளவிலும் அதிக அளவில் ஃபேஸ்புக், ட்விட்டரில் பின் தொடர்பவர்கள் இருக்கும் தலைவராக மோடி திகழ்கிறார்.
அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்புக்கு கடந்த 14 மாதங்களில் அவரின் ட்விட்டர் பக்கத்தில் 20.49 கோடி கமென்ட்கள், லைக்குகள், ஷேர்கள் கிடைத்துள்ளன. இருப்பினும், மோடிக்கு 11.36 கோடி கமென்ட்கள், லைக்குகள், ஷேர்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தி அதிகமான அளவு லைவ் ப்ரோக்ராம்களில் பேசுவதை நியூசிலாந்து பிரதமர் ஜேக்கின்டா ஆர்டெர்ன் வழக்கமாகக் கொண்டுள்ளார். அவரின் கார் பயணத்தின் போதும், வீட்டில் இருக்கும் போதும், அலுவலகத்தில் இருக்கும்போதும் நேரலை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.