காத்மண்டு: நேபாளத்தின் ஜானக்பூர் மற்றும் உ.பி., யின் அயோத்தி இடையிலான பஸ் சேவையை பிரதமர் நரேந்திர மோடி, நேபாள பிரதமர் சர்மா ஒலி இருவரும் இணைந்து துவக்கி வைத்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, ராமாயண சர்க்யுட் இரு நாட்டு மக்களையும் நேரடியாக இணைத்து வைக்கும் என்று பெருமிதம் பொங்க குறிப்பிட்டார்.
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நேபாளம் சென்றுள்ள பிரதமர் மோடி இன்று காலை நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்குச் சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் ஜனகபுரி எனப்படும் ஜனக்புர் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள ஜானகி கோயிலில் தரிசனம் செய்தார். அவருடன் நேபாள பிரதமர் ஒலி உடன் சென்றார். பின் இருவரும் இணைந்து ஜனக்புர்- அயோத்தி பஸ் சேவையை துவக்கி வைத்தனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, “இரு நாடுகளுக்கு இடையிலான பஸ் சேவையை துவக்கி வைப்பது பெருமை அளிக்கிறது. இதன் மூலம் இரு நாட்டு மக்களுக்கு இடையிலான உறவு மேம்படும்.
இந்திய நேபாள உறவு என்பது, திரேதா யுகத்திலேயே தொடங்கிவிட்டது. அப்போது மாமன்னர் ஜனகரும் மாமன்னர் தசரதரும் அயோத்தியையும் ஜனகபுரியையும் மட்டும் இணைத்தார்களில்லை, இந்திய – நேபாள உறவையும் வலுப்படுத்தி இணைத்து வைத்துள்ளார்கள்.
இரு நாட்டு மக்களும் நேரடியாக ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இது, இரு நாட்டு சுற்றுலா வளர்ச்சியிலும் முக்கையப் பங்கு வகிக்கும். இந்தியா நேபாளம் இரு ந்நாடுகளும் ராமாயண் சுற்று என்பதை கட்டமைத்து வளர்க்க வேண்டும். அதற்கான அடித்தளம் இது என்று கூறினார்.
நேபாள பிரதமர் சர்மா ஒலி கூறுகையில், நேபாளத்துடனான உறவை வலுப்படுத்தியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இந்தியா உதவியுடன் நேபாளத்தில் ஹைட்ரோ எலெக்ட்ரிக் திட்டம் அமைக்கப் படுகிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கிறார் மோடி.