கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் பதாமி தொகுதி மிகவும் எதிர்பார்க்கப்படும் பரபரப்பான தொகுதிகளில் ஒன்று. காரணம், இங்கே முதல்வர் சித்தராமையா போட்டியிடுவதுதான்!
தனக்கு செல்வாக்கு உள்ள மைசூரு சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடும் சித்தராமையா, என்ன காரணத்தாலோ வட கன்னடத்தில் உள்ள பதாமி தொகுதியிலும் போட்டியிடுகிறார். ஆனால், இந்தத் தொகுதியில் உள்ளூரில் செல்வாக்கு பெற்றவராகத் திகழ்கிறார் பாஜக., சார்பில் போட்டியிடும் ஸ்ரீராமுலு.
தற்போது வட கன்னடத்தில் கடும் வெப்பநிலை நிலவுகிறது. 40 டிகிரி முதல் 43 டிகிரி வெப்பநிலை இருப்பதால் பெரும்பாலான வாக்காளர்கள் வாக்களிக்க வராமல் வீட்டிலேயே முடங்கிப் போயினர். இந்நிலையில் பதாமி தொகுதிக்கு உட்பட்ட திப்புநகரில் உள்ள வாக்குச் சாவடி எண்கள் 142, 143, 144 ஆகிய சாவடிகளில் மிக மிகக் குறைவான அளவிலேயே வாக்குகள் பதிவாகின. அதுபோல் பெரும்பாலான வாக்குச் சாவடிகள் காத்தாடிக் கொண்டிருந்தன.
இதுகுறித்து திப்பு நகர் பகுதி வாக்காளர்கள் கூறியபோது, வேலை விஷயமாக பலரும் வெளி மாநிலங்கள், மாவட்டங்களுக்குச் சென்றுவிட்டனர். இங்கே வேலையில்லாத் திண்டாட்டம் மிக அதிகம் என்றனர்.
வாக்குகள் குறைவாகப் பதிவாவது, காங்கிரஸுக்கு பின்னடைவு என்று கூறப் படுகிறது. பதாமி தொகுதியில் சீதாராமையாவுக்கு இதன் மூலம் பதில் அளித்திருக்கிறார்களா வாக்காளர்கள் என்று அரசியல் நோக்கர்கள் விவாதித்து வருகின்றனர்.