பெங்களூரு: கர்நாடகத்தில் இன்று மாலை 4 மணிக்கு என்ன நடக்கும் என நாடே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறது. பொது மக்கள் மட்டுமல்ல, நீதிமன்றம் சென்று பல்வேறு சட்டச் சிக்கல்களையும் எதிர்கொண்டுள்ளதால், சட்ட வல்லுனர்களும் என்ன ஆகப் போகிறது என்ற பரபரப்புடன் காத்திருக்கின்றனர்.
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் தனித்து ஆட்சி அமைக்கக் கூடிய அளவுக்கு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுவேகூட அனைத்து அரசியல் கட்சிகளின் முகத்திரையைக் கிழிக்கும் வகையில் அமைந்துவிட்டது.
தேர்தல் நடைபெற்ற 222 தொகுதிகளில் 78ஐப் பெற்றுள்ளது காங்கிரஸ். 37 இடங்களை வென்ற குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முயற்சித்துள்ளது. 104 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவான பாஜக.,வின் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்து, சட்டசபையில் 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கூறினார்.
தாங்கள் கூட்டணியாக அரசமைக்க வேண்டுகோள் விடுத்தும் பாஜக.,வுக்கு வாய்ப்பு கொடுத்ததால், அதைத் தாங்க இயலாத காங்கிரஸ், மஜத., ஆளுநரின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இரவோடு இரவாக வழக்கு போட்டு நாட்டுக்கு அதிர்ச்சி அளித்தன. பாஜக.,வை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தது சட்ட விரோதம் என்றும், எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்க தடைவிதிக்க வேண்டும் என்றும் ஜனநாயக ரீதியில் மக்கள் அளித்த முடிவை மாற்றி அமைக்க நீதிமன்றத்துக்கு நெருக்கடி கொடுத்தன.
இந்த மனுவை விடிய விடிய விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி, எடியூரப்பா பதவி ஏற்க தடை விதிக்க மறுத்துவிட்டது. இருப்பினும் இந்த வழக்கில் எடுக்கப்படும் தீர்ப்பு, அவர் முதல்வர் பதவியில் நீடிப்பதை கட்டுப்படுத்தும் என்றது. இந்நிலையில், முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றார். அமைச்சரவை சகாக்கள் பதவி ஏற்காமல், தனி நபராக அவர் மட்டும் பதவி ஏற்றார்.
இத்தகைய சூழலில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடக சட்டசபையில் சனிக்கிழமை (இன்று) மாலை 4 மணிக்கு முதல்வர் எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், வாக்கெடுப்பை நடத்த மூத்த உறுப்பினர் ஒருவரை தற்காலிக அவைத்தலைவராக நியமிக்க வேண்டும் என்றும், எம்.எல்.ஏ.க்களுக்கு மாநில டி.ஜி.பி. உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர். தாங்கள் எதிர்பார்த்தபடி கிடைத்த இந்த உத்தரவால், காங்கிரஸும் மஜத.,வும் உற்சாகம் அடைந்துள்ளன.
இந்நிலையில், கர்நாடக சட்டசபை இன்று காலை 11 மணிக்குக் கூடுகிறது. முதலில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்களுக்கு தற்காலிக அவைத்தலைவர் போப்பையா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்ததும் மாலை 4 மணிக்கு, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை முதல்வர் எடியூரப்பா சட்டசபையில் தாக்கல் செய்து பேசுகிறார்.
தொடர்ந்து எதிர்க் கட்சித் தலைவர்கள் பேசுவார்கள். பின்னர் நம்பிக்கை தீர்மானத்தின் மீது தற்காலிக சபாநாயகர் வாக்கெடுப்பு நடத்துவார். ஓட்டெடுப்பை ரகசியமாக நடத்தக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருப்பதால், வெளிப்படையாக நடைபெறும். நம்பிக்கைத் தீர்மானத்தை ஆதரிக்கும் உறுப்பினர்கள் தங்கள் கைகளை உயர்த்தியோ அல்லது எழுந்து நின்றோ ஆதரவு தெரிவிப்பார்கள்.
இத்தகைய சூழலில் இன்று மாலை 4 மணிக்கு மேல் எடியூரப்பா, காங்கிரஸ் உருவாக்கியுள்ள இந்தச் சதி வலைச் சூழலை வென்றெடுப்பாரா, அல்லது அரசு வேண்டாம் என்று காங்கிரஸ் மஜத,. சந்தர்ப்பவாத அரசியலை வெற்றி பெறச் செய்வாரா என்பது தெரிந்துவிடும்.