புது தில்லி: மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் காஷ்மீர் முதல்வராகப் பதவி வகித்து வந்த மெஹபூபா முப்தி, செவ்வாய்க்கிழமை இன்று தனது பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் ஓராவிடம் வழங்கினார்.
காஷ்மீரில் முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையிலான பிடிபி.,க்கு அளித்து வந்த ஆதரவை பாஜக., திரும்பப் பெற்றுக் கொண்டது. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக ஆளுநரிடம் பாஜக., கடிதம் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, மாநில முதல்வராகப் பதவி வகித்து வந்த மெஹபூபா தனது பதவி விலகல் கடிதத்தை ஆளுநரிடம் அளித்துள்ளார்.
காஷ்மீரில் மஜக., – பாஜக., கூட்டணி ஆட்சி இருந்து வந்தது. கூட்டணியின் முதல்வராக மெஹபூபா முப்தி பதவி வகித்து வந்தார். பிடிபி.,க்கு 28 எம்எல்ஏ.,க்களும், பாஜக.,வுக்கு 25 எம்எல்ஏ.,க்களும் உள்ளனர். மொத்தம் 87 உறுப்பினர் கொண்ட சட்ட சபையில் இக்கூட்டணியின் பலம் 53ஆக இருந்து வந்தது. தேசிய மாநாட்டுக் கட்சி 15 உறுப்பினர்களையும், காங்கிரஸ் 12 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. இதர உறுப்பினர்கள் 7 பேர் உள்ளனர்.
இந்நிலையில், பொருந்தாக் கூட்டணியாக உருவான பிடிபி., பாஜக., கூட்டணியில் இரு கட்சிகளுக்கும் இடையே பல விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. குறிப்பாக., பிரிவினைவாதக் கொள்கையுடன் பல்வேறு விவகாரங்களில் கருத்து தெரிவித்தும் செயல்பட்டும் வந்த மெஹபூபா முப்தியுடன் அண்மைக் காலத்தில் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டன. ஜம்முவுக்கும் லடாக், காஷ்மீர் பகுதிக்கும் இடையில் உறுப்பினர்களிடம் கருத்த வேறுபாடுகள் ஏற்பட்டன.
கதுவா சம்பவத்தில், பாஜக.,வின் நற்பெயரை சீர்குலைக்க என்றே முப்தி அரசு போலீஸார் உதவியுடன் பல்வேறு சதித் திட்டங்களைத் தீட்டியதும், வேண்டுமென்றே இஸ்லாமிய பிரிவினைவாதிகள், அடிப்படைவாதிகளுக்கு உதவும் நோக்கத்துடன் ஹிந்து- முஸ்லிம் மதப் பிரச்னையாக அதை உருவாக்கியதும் விசாரணைகளில் தெரியவந்தது. இந்தப் பிரச்னையினால், மாநிலத்தில் கூட்டணியில் இருந்த பாஜக., தலைவர்கள் சிலர் கூண்டோடு அரசில் இருந்து ராஜினாமா செய்து, புதியதாக உறுப்பினர்கள் அமைச்சரவையில் சேர்க்கப் பட்டனர்.
இத்தகைய முரண்பாடான சம்பவங்கள் அங்கே கூட்டணி ஆட்சியை எந்நேரமும் முடிவுக்குக் கொண்டு வரும் மன நிலையை உறுப்பினர்களிடம் தோற்றுவித்திருந்தன. இந்நிலையில், மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவும் ராணுவத்துக்கு மறைமுகமாக நெருக்கடியும் கொடுத்து வந்த பிடிபி.,யுடன் கூட்டணி தேவையா என உறுப்பினர்கள் தலைமையிடம் பகிரங்கமாகவே கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். இதை அடுத்து பாஜக., தலைவர் அமித் ஷா, மாநில பாஜக., தலைவர், பாஜக.,வைச் சேர்ந்த துணை முதல்வர், எம்எல்ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். அதன் முடிவில், காஷ்மீரில் பிடிபி கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்ளலாம் என ஒரு முக்டிவுக்கு வந்தது பாஜக., இதை அடுத்து, அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது.
காஷ்மீர் நிகழ்வுகள் தொடர்பாக பாஜக., தலைவர்களில் ஒருவரான ராம் மாதவ் செய்தியாளர்களிடம் கூறியபோது, காஷ்மீர் விவகாரம் குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம். அண்மைக் கால நிகழ்வுகள் மற்றும் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தினோம். கூட்டணியை சிறப்பாகக் கொண்டு செல்லவே பெரும் முயற்சி செய்தோம். ஆனால், அண்மைக் கால நிகழ்வுகளால், பிடிபி கட்சியுடன் கூட்டணியை தொடர்வது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல என்ற முடிவுக்கு வந்தோம். இதனால் கூட்டணியிலிருந்து வெளியேறுகிறோம்.
மாநிலத்தில் பேச்சு சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பயங்கரவாத, பிரிவினைவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. பத்திரிகையாளர் புஹாரி படுகொலை கண்டனத்துக்கு உரியது. மக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப் பட்டுள்ளன. வளர்ச்சித் திட்டங்கள், சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் வேறுபாடுள்ளது. மாநிலத்துக்கு தேவையான வளர்ச்சி நிதியை மத்திய அரசு தாராளமாகவே வழங்கி வந்தது என்று கூறினார்.
இதுவரையில் பல்வேறு சிக்கல்களுக்கு நடுவே, பொருந்தாக் கூட்டணியாக பிடிபி.,யுடன் தொடர்ந்து வந்த பாஜக., கூட்டணி இப்போது முடிவுக்கு வந்துள்ளது.