பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் அடுத்த கட்ட பரபரப்பு அரசியல் காட்சி அரங்கேறுகிறது. ஆட்சி அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு திடீரென மவுசு கூடியுள்ளது.
கர்நாடக காங்கிரஸைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 7 பேரும் அமைச்சர் ஒருவரும் திடீரென இன்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவைச் சந்தித்துப் பேசியுள்ளனர். இதனால், கட்சி இரண்டாகப் பிளவுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்து, ஹெச்.டி. குமாரசாமியின் தயவில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பேரம் பேசப்பட்டது. குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களையே கொண்டிருந்த போதும், அதன்படி குமாரசாமி முதலமைச்சர் ஆகிவிட்டார்.
ஆனால், குமாரசாமிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்ற காரணத்தைச் சொல்லி, ம.ஜனதா தளத்தில் இருந்து தேவேகவுடவை எதிர்த்து கட்சியில் இருந்து வெளியேறி காங்கிரஸில் ஐக்கியமாகி, சென்ற முறை முதல்வராகவும் பதவி வகித்த சித்தராமையா, இந்த முறை அதே குமாரசாமி முதல்வராக வர காங்கிரஸின் நெருக்குதலால் பேரம் பேசும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் தனக்கு அரசியலில் முக்கியத்துவம் இல்லாமல் போனது என்று கருதி ஒதுங்கியிருந்தார் சித்தராமையா.
இந்நிலையில், திடீரென காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் 7 பேரும் ஒரு அமைச்சரும் சித்தராமையாவின் பக்கம் சாய்ந்துள்ளனர். இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.