உஜ்ஜயினி: எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர்பில், மீண்டும் ஒரு போராட்டம் தலை தூக்கியிருக்கிறது. மத்திய பிரதேசம் உஜ்ஜையினியில் வெள்ளிக்கிழமை 51 ஆயிரம் பிராமணர்கள் ஒன்று திரண்டு ஆளும் பாஜக.,வுக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். ஜப் ஜப் ப்ராஹ்மன் போலா ஹை, ராஜ் சிங்காசன் தோலா ஹை (எப்போது பிராமணர் குரலை உயர்த்துகிறாரோ அப்போது சிம்மாசனங்கள் வீழ்ந்திருக்கின்றன) என்ற முழக்கங்கள் இந்தப் போராட்டத்தின் போது எழுப்பப் பட்டிருக்கின்றன.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி எஸ்சி,எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரக் கோரி இந்தப் போராட்டம் நடத்தப் பட்டுள்ளது. எஸ்சி., எஸ்டி.,யினரைப் பாதுகாக்கும் சட்டத்தின்படி ஒருவரைக் கைது செய்வதற்கு முன்னர், தகுந்த ஆதாரங்களும் விசாரணைகளும் நடத்தப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தக் கோரியும், சாதி வாரி இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட எஸ்சி எஸ்டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தத்தை உடனடியாகக் கொண்டுவரக் கோரியும், பிராமணர்கள் நல வாரியம் அமைக்கவும், அனைத்து மாநிலங்களிலும் உயர் வகுப்பினருக்கென ஒரு பிரத்யேக பல்கலைக் கழகம் அமைக்கவும் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி, மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் 51 ஆயிரம் பிராமணர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் பெண்கள் சிலர் பரசுராமரின் ஆயுதமான கோடலியைக் கையில் வைத்திருந்தனர். தசரா மைதானத்தில் கூடியவர்கள், பாரதிய பிராமண மஹாசங்கம் என்ற பேனரில் ஆளும் பாஜக.,வுக்கு கடும் நெருக்கடியினை ஏற்படுத்தியுள்ளனர். பணிஉயர்வுகளில் சாதிய இட ஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப் படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இட ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப் பட்டன.
வரும் தேர்தலில் ஒரு கண் வைக்கப் போகிறோம்; பாஜக., காங்கிரஸ் இரண்டுமே எங்களை வஞ்சித்து வருகின்றன; உயர் வகுப்பினருக்கு கறுப்புச் சட்டத்தைப் போடுவதால் நாங்கள் பாஜக.,வையும் விரும்பவில்லை, காங்கிரஸையும் விரும்பவில்லை என்று போர்க்குரல் எழுப்பியுள்ளார் மகாமண்டலேஷ்வர் அதுலானந் சரஸ்வதி.
கமல் கிஷோர் நாகர் என்பவர் பேசியபோது, மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். இன்னும் இரு மாதங்களில் பாஜக.,வும் காங்கிரஸும் பிச்சை எடுக்க நம்மிடம் வருவார்கள் என்று கூறியுள்ளார். தொடர்ந்து மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், உஜ்ஜயினி பாஜக., எம்பி சிந்தாமன் மால்வியாம் உஜ்ஜயினி தெற்கு எம்.எல்.ஏ., மோஹன் யாதவ் ஆகியோரின் உருவபொம்மையை எரித்தனர்.
முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் இப்போது இரு தரப்புக்கும் இடையில் மாட்டிக் கொண்டு தவிக்கிறார்.